இரு பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களாலும் மக்களுக்கு எவ்வித முன்னேற்றமும் ஏற்படாது – யாழில் சிறிதுங்க ஜயசூரிய

ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கியுள்ள பிரதான கட்சிகள் பிரதேச சபை தேர்தல்களில் பேசுவது போல மக்களுக்கு உப்புச் சப்பில்லாத விடயங்களைப் பேசி வருகின்றனர். இவர்களினால் மக்களுக்கு எவ்வித முன்னேற்றமும் ஏற்படப்போவதில்லை என ஐக்கிய சோஷலிச கட்சியின் பொதுச்செயலாளர் சிறிதுங்க ஜயசூரிய தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் ஊடக மையத்தில் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதி தேர்தலில் பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் தங்களின் தேர்தல் பிரசாரத்தின் போது மக்களுக்கு சில உறுதிமொழிகளை வழங்கி வருகின்றனர். ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச மக்களின் பிரச்சினைக்கு ஒருநாளில், ஒரு மாதத்தில் எனப் பல கதைகளை மேடைகளில் கூறி வருகின்றார்.

இன்னொரு பக்கத்தில் பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஷ தாம் வெற்றி பெற்றால் சிறையில் உள்ள இராணுவத்தை அடுத்த நாளில் விடுதலை செய்வேன் எனக் கூறுகின்றார். இதன் பிரகாரம் பார்த்தால் நாட்டில் சர்வாதிகார ஆட்சியே ஏற்படும்.

இரு பிரதான கட்சிகளின் வேட்பாளர்களும் கல்வி,சுகாதாரம் மக்களின் இதர பிரச்சினைகள் பற்றிக் கதைப்பதாக இல்லை.குறிப்பாகத் தமிழ் மக்களின் அரசியல் தீர்வு குறித்துப் பேசாது உள்ளனர். இவர்கள் மட்டுமன்றி ஜே.வி.பியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசநாயக்க நாட்டில் உள்ள அனைவரும் சமம் எனக் கூறி அரசியல் தீர்வு குறித்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

இந்த வேட்பாளர்களிடம் நாட்டு மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான எவ்வித திட்டமும் இல்லை.சாதாரண பிரதேச சபை தேர்தல் போன்று ஜனாதிபதி தேர்தலில் பேசி வருகின்றனர்.எனவே ஜனாதிபதி தேர்தலில் மக்கள் நன்கு சிந்தித்து வாக்களிக்க வேண்டும். சஜித்,கோத்தாபயவால் மக்களுக்கு தீர்வு ஏற்படப்போவதில்லை.

எனவே மாற்றத்திற்காக ஐக்கிய சோஷலிச கட்சியில் போட்டியிடும் ஜனாதிபதி வேட்பாளரை வெற்றியடையச் செய்ய முச்சக்கர வண்டி சின்னத்திற்கு வாக்களித்து ஆதரவு வழங்க வேண்டும் என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!