பலாலியில் இந்திய குழுவுக்கு தேநீர் கொடுக்க மறுத்த சிறிலங்கா விமானப்படை தளபதி

யாழ்ப்பாணம் அனைத்துலக விமான நிலையத்தை ஆரம்பிப்பதற்கு சிறிலங்கா விமானப்படைத் தளபதி ஒத்துழைக்கவில்லை என்றும், இந்திய தொழில்நுட்ப குழுவுக்கு தேநீர் கூட வழங்க மறுத்தார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களில் ஒருவரான பேராசிரியர் ரட்ணஜீவன் கூல், ‘கொழும்பு ரெலிகிராப்’ இணையத்தில் யாழ்ப்பாணம் அனைத்துலக விமான நிலைய திறப்பு விழாவில் பங்கேற்றது தொடர்பாக ஒரு கட்டுரையை எழுதியுள்ளார்.

அந்தக் கட்டுரையிலேயே அவர் இந்த விபரங்களை வெளியிட்டுள்ளார். அவரது கட்டுரையில் இதுபற்றிக் கூறப்பட்டுள்ளதாவது,

“யாழ்ப்பாண விமான நிலையத்தை ஒரு தேசிய முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதுவதற்குப் பதிலாக, அந்த திட்டம் இனவாத பொறாமைக்கு உள்ளானது.

விமானப்படைத் தளபதி ஒத்துழைக்க தவறிவிட்டார்.

2019 செப்ரெம்பர் 16ஆம் நாள், வந்திருந்த இந்திய தொழில்நுட்ப குழுவினர் கடுமையான வேலைகளின் பின்னர், தேநீர் கேட்டனர்.

அதற்கு அவர், “இந்தியர்கள் இதனை தமிழர்களுக்காக செய்கிறார்கள். நீங்கள் என்னிடம் தேநீர் பரிமாற வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்களா?“ என்று கேள்வி எழுப்பினார்.

இதையடுத்து, சோர்ந்து இந்திய குழுவினர், பிற்பகல் 2 மணியளவில் தமக்குப் புத்துணர்ச்சியைப் பெறுவதற்காக ஜீப்பை காங்கேசன்துறைக்கு அனுப்பினர்” என்று அவர் அந்தக் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!