சிவாஜிலிங்கத்தின் அதிரடி முடிவு!

ஐந்து பிரதான கட்சிகளினால் முன்வைக்கப்பட்டிருக்கும் 13 கோரிக்கைகளை பிரதான வேட்பாளர்களான சஜித் பிரேமதாச அல்லது கோத்தாபய ராஜபக்ஷ ஏற்றுக் கொண்டால் தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து விலக தயார் என்று முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

கொழும்பு – இலங்கை மன்றக் கல்லூரியில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தமிழ் மக்களுக்கான நிரந்தர தீர்வு மாத்திரமின்றி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினைக்கும் இது வரையில் எந்த தலைவரும் தீர்வு வழங்கவில்லை. கர்ப்பிணிப் பெண்கள், சிறுவர்கள் உள்ளிட்ட 10,000 பேர் இராணுவத்திடம் சரணடைந்தார்கள். அவ்வாறு சரணடைந்தவர்களுக்கு என்ன ஆனது என்பதற்கு பதில் கிடைக்கவில்லை. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அவரது ஆட்சி காலத்தில் பாதுகாப்பு செயலாளராக இருந்த கோதாபய ராஜபக்ஷ, முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா மற்றும் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட அனைவரும் இதற்கு பொறுப்பு கூற வேண்டியவர்களே.

ஒருதரப்பினருக்கு கிடைக்க வேண்டிய வாக்குகளை சிதைப்பதற்காக நான் பணம் வாங்கியிருப்பதாகவும் சிலர் குற்றஞ்சாட்டுகின்றனர். துண்டு பிரசுரங்களை அச்சிட்டு பிரசாரம் செய்வதற்கு கூட என்னிடம் போதுமான நிதி இல்லை. அனந்தி சசிதரனே நான் கட்டுப்பணம் செலுத்துவதற்கும் உதவி செய்தார்.

தேர்தலுக்கு மிகக் குறுகிய காலமே காணப்படுகின்ற நிலையில் தற்போது நிரந்த தீர்வை பற்றி பேசுவது அர்த்தமற்ற செயலாகும். எனவே இயன்ற வரை இடைக்கால தீர்வையாவது பெற்றுக் கொள்ளவே முயற்சிக்க வேண்டும். இதைப்பற்றி எதுவுமே கூறாமல் எவ்வாறு மக்களிடம் வாக்கு கேட்க முடியும்? எனவே தமிழ் கட்சிகளின் 13 கோரிக்கைகளையும் பிரதான வேட்பாளர்கள் இருவரில் ஒருவர் ஏற்றுக் கொண்டால் நான் போட்டியிலிருந்து விலக தயாராகவுள்ளதாகவும் கூறினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!