ஜே.வி.பி. வேட்பாளருக்கு தமிழ், முஸ்லிம் வாக்காளர்கள் வாக்களிப்பது சஜித்தின் வெற்றி வாய்ப்பை குறைத்து, கோத்தாவை வெற்றிபெற வைக்கும் வாய்ப்பை அதிகரிக்கிறது என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது முகநூல் பக்கத்தில் பதிவொன்றை அவர் இட்டுள்ளார். அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
ஜே.வி.பி. ஒரு அரசியல் சிறுபான்மை கட்சி. இன்று ஒப்பீட்டளவில் நல்ல கட்சிதான். அதன் தலைவர் அநுர என் நல்ல நண்பர். அநுர வேட்பாளராக அறிவிக்கப்பட்டவுடன் அவருக்கு முதலில் வாழ்த்து சொன்ன தமிழ் அரசியல்வாதி நான்தான். இக்கட்சியின் அரசியல் குழு உறுப்பினர்கள் பலர் என் நண்பர்கள்தான். இந்த கட்சிக்கும் ஒரு கறுப்பு பக்க வரலாறு, ஐ.தே.க., ஸ்ரீல.சு.க. மற்றும் இன்றைய பொதுஜன பெரமுன போன்று இருக்கிறது. எனினும் இன்றைய எல்லா பிரச்சினைகளுக்கும் வரலாற்றிலிருந்து விடை தேடக்கூடாது வரலாற்றிலிருந்து பாடம்தான் படிக்க வேண்டும்.
ஆனால், இங்கே ஒரு பிரச்சினை இருக்கிறது. ஜே.வி.பி, இன்றைய போட்டியில் வெகுதூரம் தள்ளி மூன்றாம் இடத்தில் இருக்கிறது. வெற்றி பெறுவது சாத்தியமில்லை. இந்நிலையில் இவர்களுக்கு தமிழ், முஸ்லிம் வாக்காளர்கள் வாக்களிப்பது, சஜித்தின் வெற்றி வாய்ப்பை குறைத்து, கோத்தாவை வெற்றிபெற வைக்கும் வாய்ப்பை அதிகரிக்கிறது. சஜித், கோத்தா – இருவரும் ஐம்பது விகிதத்துக்கு போட்டியிடும் போது, ஜே.வி.பி. ஐந்து விகிதத்துக்கு போட்டி இடுகிறது. இதுதான் உண்மை. இதை மறைத்து, அலங்கார வார்த்தைகளை கொண்டு, பூசி மெழுகுவது பிழை.
இதை அறியாமல், சஜித்துக்கு போட வேண்டிய எமது வாக்கில் ஒரேயொரு விகிதத்தை நாம் அநுரவுக்கு போட்டு விட்டால், சஜித் தோற்க, கோத்தா வந்து விடுவார். (இதனால்தான் தமிழ், முஸ்லிம் மக்கள் மத்தியில் எமக்கு போடாவிட்டால், அவருக்கு போடுங்கள், இவருக்கு போடுங்கள், சஜித்துக்கு மட்டும் போட்டு விடாதீர்கள் என மஹிந்த அணி இரகசிய அறிவுறுத்தல் செய்கிறது)
இதற்கு ஒரே வழிதான் உள்ளது. ஜே.வி.பி, சிங்கள மக்கள் மத்தியில் தன் செல்வாக்கை அதிகரித்து, அதன் பின் எம்மிடம் வர வேண்டும். ஆனால், அது இன்னமும் நடைபெறவில்லை. மூன்றாம் இடம் என்று சொல்கிறோமே தவிர, அவர்கள் சஜித், கோத்தாவுக்கு வாக்கு வங்கிகளிடம் இருந்து வெகுதூரத்தில் இருக்கிறார்கள்.
முதலில், ஜே.வி.பி சிங்கள மக்களிடம் அடிப்படை வாக்குகளை 35 விகிதம் பெற்றால், நாம் அவர்களுக்கு மிகுதி தேவையான ஒரு 15 விகிதத்தை கொடுத்து வெற்றி பெற வைக்கலாம்.
இப்போது என்னவென்றால் இவர்கள் முதல் அடிப்படை வாக்கையே எங்களிடம் கோருகிறார்கள். இது இப்போது எம்மால் செய்ய முடியாது. அவர்கள் வெற்றி பெற்று தொழிலாளர் ஆட்சியை நிறுவும் போது இந்நாட்டில் தமிழ் பேசும் மக்களாகிய நாம் இருக்கவே மாட்டோம். பாராளுமன்றத் தேர்தலின் பின் அமையும் பாராளுமன்றத்தில் வேண்டுமானால், இதுபற்றி யோசிக்கலாம்.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!