நாடாளுமன்றத் தேர்தலுக்கு மக்கள் ஆணை கோரும் மகிந்த, கோத்தா

நாடாளுமன்றத் தேர்தலை தாமதமின்றி நடத்துவதற்கான மக்கள் ஆணையை, அதிபர் தேர்தலில் வழங்குமாறு சிறிலங்காவின் எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச கோரிக்கை விடுத்துள்ளார்.

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளர் கோத்தாபய ராஜபக்சவின் தேர்தல் அறிக்கை வெளியிடும் நிகழ்வில் நேற்று உரையாற்றிய போதே- அவர் இவ்வாறு கோரிக்கையை விடுத்துள்ளார்.

‘ தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளபடி, நாடாளுமன்றத் தேர்தலை தாமதமின்றி நடத்த, அதிபர் தேர்தலில், மக்களிடமிருந்து ஒரு ஆணையை நாங்கள் கேட்கிறோம்.

எமது இந்த தேர்தல் வெற்றி, விரைவில் நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கான ஆணையாக கருதப்படும்.

பாதுகாப்பான நாடு உறுதிசெய்யப்படுவதுடன், 2020 ஏப்ரல் புத்தாண்டுக்கு முன்னதாக, பாரிய பொருளாதார நிவாரணப் பொதி மக்களுக்கு வழங்கப்படும்.

எதிரிகள் எப்போதுமே தமது வாக்குகளைப் பெறுவதற்காக மட்டுமே, முஸ்லிம் மற்றும் தமிழ் சமூகங்களை தவறாக வழிநடத்தி, ஏமாற்றி, வருகின்றனர்.

நாங்கள் எப்போதும் உண்மையை பேசுவதன் மூலம் அவர்களுடன் நட்புறவைப் பேணி வருகிறோம், உண்மையைத் தவிர வேறொன்றுமில்லை.” என்றும் அவர் கூறினார்.

அதேவேளை, இந்த நிகழ்வில் உரையாற்றிய கோத்தாபய ராஜபக்சவும், நொவம்பர் 16ஆம் நாள் நடக்கவுள்ள அதிபர் தேர்தலுக்குப் பின்னர், உடனடியாக, நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கான, மக்கள் ஆணையைக் கோரியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!