குழந்தை சுஜித்தின் நிலை குறித்து வைத்தியர் கூறுவது என்ன ?

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகேயுள்ள நடுக்காட்டுப்பட்டியில், கடந்த 25 ஆம் திகதி மாலை வீட்டின் தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த சுஜித் எனும் 2 வயது குழந்தை ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்தது.

100 அடி ஆழத்தில் சிக்கியுள்ள குழந்தையை மீட்க மேற்கொண்ட பலகட்ட முயற்சிகள் தோல்வியடைந்த நிலையில், தற்போது ஆழ்துளை கிணறு அருகே சுரங்கம்போல மற்றொரு குழி தோண்டப்பட்டு குழந்தையை மீட்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

இந்நிலையில், குழந்தை சுஜித்தின் நிலைகுறித்து குழந்தை மனநல வைத்தியர் ரமா கருத்து தெரிவித்துள்ளார்.

குழந்தை இருள் சூழ்ந்த பகுதியில் எவ்வளவு நேரம் உயிர் பிழைக்க வாய்ப்பு உள்ளது?

சாதாரணமாக ஒரு குழந்தை தண்ணீர், இன்றி இருள்சூழ்ந்த பகுதியில் எவ்வளவு நாள் உயிர் வாழும் என்று சொல்ல முடியாது. ஆனாலும் சாதாரணமாக ஒரு குழந்தை நீரின்றி 7 நாட்கள் வரை உயிர் வாழ்ந்த குழந்தைகளை நாங்கள் பார்த்திருக்கின்றோம்.

அதனால் இந்த மீட்பு பணி மிகவும் மும்முரமாக தொடர்ந்து சுகாதாரத் துறை அமைச்சரின் கீழ் இடம்பெற்று வருகின்றது. மேலும் ஓவ்வொரு செக்கன்களும் முக்கியம் என்பதால் அனைவரும் இணைந்து ஒரு குழுவாக மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். குழந்தையை மீட்டவுடன் குழந்தைக்கு தேவையான அனைத்து விடயங்களையும் தேவையாக வைத்துள்ளோம்.

ஆழ்துளை கிணற்றில் ஈரலிப்பான பகுதி காணப்படுவதால் குழந்தைக்கு எவ்வாறான பாதிப்புக்கள் ஏற்படும்?

ஈரப்பதன் மற்றும் தட்பவெப்பத்தில் குழந்தை எப்படி இருக்கும் என்பது சரியாக சொல்வது கடினம். ஆழ்கிணற்றில் குழந்தை எவ்வாறு இருக்கும் என சரியாக சொல்வது கடினம். அதனால் தான் குழந்தையை மீட்டவுடன் குழந்தைக்கு தேவையான சிகிச்சைகளை அளிக்க தயாரா இருக்கின்றோம்.

குழந்தையை மீட்டவுடன் எவ்வாறான முதலுதவிகள் வழங்கப்படும்?

குழந்தையுடைய உடல் நிலைமையை பொறுத்து தான் முதலுதவிகள் செய்யமுடியும். முதலில் குழந்தையின் சுவாசக் குழாயில் உள்ள அடைப்பு சரிசெய்யப்படும்.

குழந்தை அசைவு இன்றி காணப்படுகின்றது. குழந்தை மயக்க நிலை இருப்பதனாலா அசைவின்றி இருக்கின்றது?

மயக்க நிலையில் இருக்கும் குழந்தை அசைவில்லை என்று சொல்ல முடியாது.

குழந்தை உளவியல் ரீதியாக எப்படி பாதிக்கப்பட்டிருக்கும்?

மயக்க நிலையில் இருந்த குழந்தைக்கு எதுவும் தெரியாது. குழந்தை எப்படியும் ஒரு அச்சத்துடன் தான் இருக்கும் . ஆனால் குழந்தையுடன் யாராவது பேசிக் கொண்டிருக்கும் போதோ அல்லது சத்தம் கேட்கும் போது யாரோ பக்கத்தில் இருப்பதாக தைரியத்தோடு இருக்கும்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!