4-வது மாடியில் தொங்கிய குழந்தையை ஸ்பைடர்மேன் பாணியில் காப்பாற்றிய வாலிபர்

பாரீசில் 4-வது மாடியில் தொங்கிய குழந்தையை ஸ்பைடர் மேன் போல் காப்பாற்றிய மாலி நாட்டைச் சேர்ந்த வாலிபருக்கு அதிபர் நேரில் பாராட்டு தெரிவித்தார்.

மாலி நாட்டை சேர்ந்தவர் மமூது கசாமா (22). இவர் வேலை தேடி பிரான்ஸ் நாட்டுக்கு வந்திருந்தார். பாரீசில் வடக்கு பகுதியில் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது ஒரு அடுக்குமாடி கட்டிடத்தின் முன்பு மக்கள் கூட்டமாக நின்று கொண்டிருந்தனர். எனவே கூட்டத்தை வேடிக்கை பார்க்க சென்றார். அங்கு கட்டிடத்தின் 4-வது மாடியில் பால்கனியை பிடித்தபடி 4 வயது குழந்தை அழுதபடி தொங்கிக் கொண்டிருந்தது.

அதை கீழே விழாமல் பக்கத்து வீட்டில் தங்கியிருக்கும் நபர் பிடித்துக் கொண்டிருந்தார். இதை கீழே நின்று வேடிக்கை பார்த்து கொண்டிருந்தவர்களில் யாரும் காப்பாற்ற முன்வரவில்லை.

ஆனால் எந்தவித தயக்கமும் இன்றி கசாமா ஸ்பைடர் மேன் பாணியில் கட்டிடத்தின் முன்புறத்தில் சுவரை பிடித்தபடி சிலந்தி பூச்சி போன்று மேலே ஏறினார்.

பின்னர் மாடி பால்கனியில் தொங்கி கொண்டிருந்த குழந்தையை பத்திரமாக மீட்டு காப்பாற்றினார். இதற்கிடையே தீயணைப்பு படையினரும் அங்கு வந்து விட்டனர். ஆனால் குழந்தையை கசாமா காப்பாற்றி விட்டார்.

இந்த வீடியோ பேஸ்புக் சமூக வலை தளத்தில் வைரலாக பரவியது. அதை தொடர்ந்து மமூது கசாமாவுக்கு பாராட்டுகள் குவிந்தன.

இச்சம்பவம் நடந்த போது குழந்தையின் பெற்றோர் வீட்டில் இல்லை. வெளியே சென்று இருந்தனர். இதுகுறித்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

ஸ்பைடர் மேன் பாணியில் குழந்தையை காப்பாற்றிய மமூது கசாமாவை பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரன் நேரில் அழைத்து பாராட்டினார். பாரிஸ் மேயர் ஆன்னி ஹிடால்கோ பேஸ்புக் சமூக தளத்தில் வாழ்த்தி நன்றி தெரிவித்துள்ளார்

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!