சஜித்தின் பரப்புரை மேடையில் சுயேட்சை வேட்பாளர் இலியாஸ்

சிறிலங்கா அதிபர் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிடும், இலியாஸ் நேற்று புதிய ஜனநாயக முன்னணியின் அதிபர் வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் தேர்தல் மேடையில் ஏறி ஆதரவு தெரிவித்தார்.

புத்தளம்- ஆனமடுவவில் நேற்று நடந்த சஜித் பிரேமதாசவின் பரப்புரைக் கூட்டத்தில், மேடையில் ஏறி சஜித் பிரேமதாசவுக்கு, சுயேட்சை வேட்பாளர் இலியாஸ் ஆதரவு தெரிவித்துள்ளார்.

புத்தளம்- அருவக்காடு குப்பை முகாமைத்துவத் திட்டம் தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு காண்பதாக இந்த மேடையில் சஜித் பிரேமதாச உறுதி அளித்துள்ளார்.

சிறிலங்கா அதிபர் தேர்தலில் இம்முறை போட்டியிடும் 35 வேட்பாளர்களில், பலர் போலி வேட்பாளர்கள் என்றும், அவர்களில் குறைந்தது 13 பேர் இரண்டு பிரதான வேட்பாளர்களாலும் நிறுத்தப்பட்டவர்கள் என்று தேர்தல்கள் ஆணைக்குழு கூறியிருந்தது.

அத்துடன் வேட்பாளர் எவரும், மற்றொரு வேட்பாளருக்கு ஆதரவு தெரிவிக்கக் கூடாது என்றும் அவ்வாறு ஆதரவு தெரிவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தேர்தல்கள் ஆணைக்குழு எச்சரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!