தமிழரின் அபிலாசைகளை நிறைவேற்றும் தீர்வை வலியுறுத்தியது இந்தியா!

தமிழ் சமூகத்தின் அபிலாஷைகளை நிறைவேற்றக் கூடிய அரசியல் தீர்வு ஒன்றைக் காணப்படுவதை உறுதிப்படுத்துமாறு இலங்கையின் புதிய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவிடம் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் வலியுறுத்திக் கூறியுள்ளார்.

கொழும்புக்கு விஜயம் செய்த இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர், ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவிடம் இந்தியாவின் இந்த விருப்பத்தை தெரிவித்ததாக புதுடில்லியில் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ரவீஷ் குமார் செய்தியாளர்களிடம் கூறினார்.

தமிழ் மக்கள் சமத்துவத்துடனும் நீதியுடனும் சமாதானமாகவும் , கண்ணியமாகவும் வாழக் கூடியதாக அவர்களது அபிலாஷைகளை நிறைவேற்றக் கூடிய தீர்வொன்றை காண்பதற்கான தேசிய நல்லிணக்க செயன்முறைகளை இலங்கை அரசாங்கம் முன்னெடுக்கும் என்ற இந்தியாவின் எதிர்பார்ப்பை இலங்கை ஜனாதிபதியிடம் ஜெய்சங்கர் பேச்சுவார்த்தையின் போது தெரியப்படுத்தினார்.

அதற்கு, இனத்துவ அடையாள பாகுபாடு இன்றி சகல இலங்கையர்களுக்குமான ஜனாதிபதியாக தான் இருப்பேன் என்று கோத்தாபய ராஜபக்ஷ ஜெய்சங்கரிடம் உறுதியளித்தார் என்றும் ரவீஷ் குமார்குறிப்பிட்டார்.

இலங்கையின் புதிய அரசாங்கத்துடன் பணியாற்றுவதற்கு இந்தியா தயாராக இருப்பதாகவும் பேச்சாளர் ரவீஷ் குமார் கூறினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!