இராஜாங்க அமைச்சர் நியமனம் இன்று நடைபெறாது?

புதிய இராஜாங்க அமைச்சர்களுக்கான நியமனம் மற்றும் அவர்களின் பதவியேற்பு நிகழ்வு இன்று நடைபெற வாய்ப்புகள் இல்லை என்று அதிகாரபூர்வ வட்டாரங்களை மேற்கோள்காட்டி கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இராஜாங்க அமைச்சர்களின் பதவியேற்பு நிகழ்வு இன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

20 இராஜாங்க அமைச்சர்கள் நியமிக்கப்படவுள்ளதாகவும், இவர்கள் பிரதி அமைச்சருக்கு மேலான அதிகாரங்களைக் கொண்டவர்களாக இருப்பார்கள் என்றும் கூறப்பட்டது.

எனினும், இந்த பதவியேற்பு நிகழ்வு இன்று இடம்பெற வாய்ப்புகள் இல்லை என்றும் நாளை அல்லது மறுநாளே இடம்பெறும் என்றும் கூறப்படுகிறது.

கடந்த வாரம் அமைச்சரவை அந்தஸ்துடைய 16 அமைச்சர்களை சிறிலங்கா அதிபர் கோத்தாபய ராஜபக்ச நியமித்திருந்தார்.

இதன்போது, அவர் அமைச்சர்களைத் தெரிவு செய்வதில் கடும் நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிட்டது.

இராஜாங்க அமைச்சர்களைத் தெரிவு செய்வதிலும் கடுமையான நெருக்கடிகளை அரசாங்கம் எதிர்கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!