கோத்தாவை சர்வதேச நீதிமன்றத்துக்கு கொண்டு செல்வோம்! கஜேந்திரகுமார்

கோத்தாவின் அரசியலை கேள்விக்குறியாக்கும் ஒரேயொரு தரப்பாக நாம்தான் இருக்கிறோம். கோத்தாவை குற்றவியல் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்ல வேண்டுமென ஜெனீவாவில் பாடுபடப் போகும் ஒரேயொரு தரப்பாக நாங்களே இருக்கப் போகிறோம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர்,

இரண்டு பேரில் யார் அதிகம் கெட்டவர் என பார்த்து வாக்களிக்க வேண்டுமென மக்களை அச்சப்படுத்தி செய்யும் அரசியல், மக்களிற்கு எந்தவொரு நன்மையையும் ஏற்படுத்தாது. மக்களை அச்சப்படுத்தி வாக்கு கேட்காமல் தத்துவார்த்த ரீதியிலேயே நாம் பகிஷ்கரிப்பு கோரிக்கையை முன்வைத்தோம். அதை மக்கள் ஏற்கவில்லையென்பது கவலையாகத்தான் உள்ளது.ஆனால், எமது முடிவுகளை மக்கள் தாமதமாக புரிந்து கொள்வார்கள்

எமது பகிஷ்கரிப்பு கோரிக்கையை மக்கள் ஏற்காதது கவலையாக இருக்கிறது. பகிஷ்கரிப்பு என்பதை விளங்கப்படுத்திய அறிக்கையை எந்தவொரு ஊடகமும் வெளியிடவில்லை. எமது கருத்தை தடைசெய்து, இருட்டடிப்பு செய்துவிட்டு, தோல்வியென கேட்க முடியாது. பகிஷ்கரிப்பு என்பதற்காக காரணத்தை தத்துவ கோணத்தில்தான் சொன்னோம்.

ஆனால் மக்களை அச்சப்படுத்திதான் பெரும்பாலும் வாக்கு கேட்கப்பட்டது. இவர்தான் அழித்தவர், இவர் வந்தால் அடிப்பார், மோசமானவரை தோற்கடிக்க இவருக்கு வாக்களிக்க வேண்டுமென மக்களை அச்சப்படுத்தி பிரச்சாரம் செய்தார்கள். இந்த நிகழ்ச்சி நிரலுக்குள் நாங்கள் சிக்குப்பட்டு கொண்டிருந்தால் தொடர்ந்து அழிவுப்பாதையிலேயே செல்வோம். எந்த முன்னேற்றமும் வராது.

அவர்களிற்கு தெரியும், தமிழ் மக்களிற்கு எதையும் கொடுக்காம. பயபீதியிலிருந்து விடுபட்டு, வேட்பாளர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை பார்த்து மக்கள் வாக்களிக்கும் கலாச்சாரம் உருவாக வேண்டும்.

தென்னிலங்கை நிலவரத்தை தமிழ் மக்களிடம் எந்தவொரு ஊடகமும் சொல்லவில்லை. தேர்தலில் யார் வெல்லப் போகிறார்கள் என்பதை சொல்லவில்லை. தமிழ் மக்கள் அள்ளிப் போட்டாலும், கோத்தா தோற்க மாட்டார் என்பதை சொல்லவில்லை. ஆனால் தென்னிலங்கை ஊடகங்கள் அதை செய்தன. இந்தஇந்த காரணங்களினால் கோத்தா வெல்வார் என தெற்கு சிங்கள, ஆங்கில ஊடகங்களின் ஆய்வுகள் வந்தன. 2015ம் ஆண்டு தேர்தலில் மைத்திரிபால வென்றபோது, ராஜபக்சவை தனிமைப்படுத்தி தோற்கடிக்க வேண்டுமென்ற அடிப்படையில்தான் செயற்பட்டனர். ராஜபக்சவை தனிமைப்படுத்தி அனைவரும் ஒன்று சேர்ந்தனர்.

2019ம் ஆண்டு தேர்தலில் அந்த நிலைமை மாறிவிட்டது. இன்று சு.க, பெரமுனவுடன் கூட்டணி வைத்து விட்டது. ஜேவிபி தனித்து போட்டியிட்டது. அப்போது மைத்திரியை ஆதரித்த சிவில் சமூகம் இப்போது இரண்டுபட்டு விட்டது. தமிழ் மக்களின் வாக்குகள் முழுமையாக கிடைத்தாலும், சஜித் வெற்றிபெற முடியாது.

நாங்கள் இந்த கருத்துக்களை மக்களிடம் சொல்லவில்லை. ஏனென்றால், எண்ணிக்கையை வைத்து எடுக்கும் முடிவுகளை முற்றாக நிராகரிக்க வேண்டும். சஜித்திற்கு போட்டால் கோத்தா வென்று வந்து பழிவாங்குவார் என சொல்லும் அரசியலை செய்யக்கூடாது என்பதற்காக இதை நாங்கள் சொல்லவில்லை. ஆனால் இதே கருத்தை சொல்லித்தான் சஜித்திற்கு வாக்களிக்க வைத்தார்கள். கோத்தா வென்றால் அழிப்பார் என மக்களை பயமுறுத்திதான் சஜித்திற்கு வாக்களிக்க சொன்னார்கள்.

பயபீதியில் மக்களை வைத்து எமது அரசியல் முடிவை எடுப்பது அடிப்படையிலேயே தவறானது. கோத்தா வெல்லப் போகிறார், சஜித்திற்கு வாக்களித்து பிரச்சனையில் சிக்காமல், பகிஷ்கரியுங்கள் என்றும் நாங்கள் மக்களை பயமுறுத்தும் அரசியலை செய்யவில்லை. அதுவும் தவறானது.

நாங்கள் தத்துவரீதியாக மட்டுமே எமது கொள்கைகளை சொன்னோம். இனியாவது மக்கள் விளங்கிக் கொள்ள வேண்டும். நாம் பகிஷ்கரித்ததை வைத்து பலர் விமர்சனம் செய்தார்கள். இன்று அந்த விமர்சனங்கள் எங்கே? கோத்தாவை வெற்றியடைய வைக்கத்தான் நாம் இதை செய்ததாக பொய் சொன்னார்கள். இன்று அந்த விமர்சனங்கள் எங்கே?

கோத்தாவின் அரசியலை கேள்விக்குறியாக்கும் ஒரேயொரு தரப்பாக நாம்தான் இருக்கிறோம். கோத்தாவை குற்றவியல் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்ல வேண்டுமென ஜெனீவாவில் பாடுபடப் போகும் ஒரேயொரு தரப்பாக நாங்களே இருக்கப் போகிறோம்.

10 வருடமாக மக்களை குழப்பி, எம்மை பற்றி பொய் சொல்லி வந்தது, இந்த தேர்தலின் பின் மக்களிற்கு அந்த தெளிவும் வருமென நம்புகிறோம்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!