நாட்டின் எதிர்காலத்துடன் விளையாட வேண்டாம் : பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை

நாட்டின் எதிர்காலத்துடன் விளையாட வேண்டாம் என்று அனைத்து இனத்தவர்களிடமும் மதத்தினரிடமும் கேட்டுக் கொள்வதாக கூறிய பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை , ஐக்கியமானதும் அமைதியானதுமான இலங்கையை கட்டியெழுப்ப வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போது இதனைத் தெரிவித்த பேராயர் மேலும் குறிப்பிட்டதாவது:

ஐக்கியமானதும் அமைதியானதுமான இலங்கையை கட்டியெழுப்ப வேண்டிய பொறுப்பு எம் அனைவருக்கும் ஏற்பட்டுள்ளது. எனவே அரசியல் ரீதியாக அல்லது இன ரீதியாக பிரிந்து போராட்டங்களை முன்னெடுப்பதால் எவ்வித பயனும் கிடையாது.

ஒருவர் மீது ஒருவர் குற்றஞ்சுமத்திக் கொண்டிருப்பது சிறப்பானதல்ல. அனைத்து இன , மத மக்களையும் ஒன்றிணைத்து அனைவிடமிருந்தும் நாட்டுக்கு கிடைக்க வேண்டிய சேவைகளை முறையாக பெற்றுக் கொள்ள வேண்டும்.

எனினும் தற்போது சில சமூக வலைத்தள ஊடகங்கள் மக்கள் மத்தியில் இன ரீதியாகவும் மத ரீதியாகவும் பேதங்களை ஏற்படுத்தும் வகையிலேயே செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன. எனவே அனைத்து இனத்தவர்களிடமும் மதத்தினரிடமும் நாட்டின் எதிர்காலத்தில் விளையாட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கின்றேன்.

விஷேடமாக தமது தனிப்பட்ட தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக ஏனையவர்களுக்கு பாதகம் ஏற்படும் வகையில் செயற்படும் கொள்கையிலிருந்து அனைவரும் விடுபட வேண்டும். நாட்டில் ஐக்கியத்தை ஏற்படுத்துமாறு அனைத்து பிரஜைகளிடமும் பொறுப்புடன் கேட்டுக் கொள்கின்றேன் என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!