சென்னையில் போராட்டம் நடத்தியதாக திருமாவளவன் உள்பட 600 பேர் மீது வழக்குப்பதிவு!

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், ஒட்டு மொத்த மாணவர்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர். தமிழகத்திலும் மாணவர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில், நேற்று சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நூற்றுக்கணக்கான மாணவர்கள், குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான வாசகங்களோடு மத்திய அரசுக்கு எதிரான முழக்கங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களுடன் இந்திய தவ்ஹீத் கூட்டமைப்பு, அறப்போர் இயக்கம், டிசம்பர் 3 இயக்கம் உள்பட பல்வேறு முஸ்லிம் அமைப்புகளும் கலந்து கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், நடிகர் சித்தார்த் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

இந்தநிலையில், குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக சென்னை நுங்கம்பாக்கதில் உள்ள வள்ளூவர் கோட்டத்தில் அனுமதியின்றி போராட்டம் நடத்திய திருமாவளவன், சித்தார்த், டிம்.கிருஷ்ணா உள்பட 600 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் ஜவாஹிருல்லா, அமெரிக்கை நாராயணன், தெஹலான் பாகவி மற்றும் சில அமைப்பினர் மீதும் இரு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக கூடுதல் உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் நுங்கம்பாக்கம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!