31 ஆயிரம் செல்லாத ரூபாய் நோட்டுகளை வைத்து இருந்த மூதாட்டி: மாற்றித்தர கோரிக்கை!

கோவையை சோ்ந்த மூதாட்டி ஒருவா் பணமதிப்பிழப்பு குறித்து தெரியாமல் வைத்துள்ள 31 ஆயிரம் செல்லாத ரூபாய் நோட்டுகளை மாற்றித்தர வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார். மத்திய அரசு கடந்த 2016-ம் ஆண்டு நவம்பா் மாதம் 8-ந் தேதி ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தது. இந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுத்து 3 ஆண்டுகள் ஆகிறது. ஆனாலும் கிராமப்புறங்களில் இருக்கும் ஒரு சில முதியவர்களுக்கு தெரியவில்லை. இதுபோன்று பணமதிப்பிழப்பு நடவடிக்கை குறித்து தெரியாமல் கோவையில் மூதாட்டி ஒருவர் செல்லாத ரூபாய் நோட்டுகளை வைத்து இருந்த சம்பவம் நடந்து உள்ளது.

92 வயது மூதாட்டி
கோவையை அடுத்த சரவணம்பட்டி கொண்டையம்பாளையம் பகுதியை சேர்ந்தவா் கமலம்மாள் (வயது 92). இவருடைய கணவர் ராஜ்வாலா. மில் தொழிலாளி. இவர்களுக்கு பிரேமா (68), ஜெயந்தி (65) ஆகிய மகள்களும், கோபால் (64) என்ற மகனும் உள்ளனர். இதில் ராஜ்வாலா கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். கமலம்மாள் தனது மகன் கோபால் வீட்டில் வசித்து வருகிறார். இந்தநிலையில் கமலம்மாள் சிறுக சிறுக ரூ.31 ஆயிரத்து 500 சேமித்துவைத்து உள்ளார். ஆனால் அந்த பணம் அனைத்தும் மத்திய அரசால் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட பழைய ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் ஆகும்.

இதுகுறித்து கமலம்மாளின் மகன் கோபால் கூறும்போது, கடந்த 2016-ம் ஆண்டு ரூ.500 மற்றும் ரூ.1000 செல்லாது என்று மத்திய அரசு அறிவித்ததை அப்போது எனது அம்மாவிடம் தெரிவித்தேன். அவர் என்னிடம் அதுபோன்று பணம் எதுவும் இல்லை என்று கூறினார்.

மாற்றித்தர கோரிக்கை

இதையடுத்து நாங்கள் அப்படியே விட்டுவிட்டோம். எனது தாயாரின் உடைகளை வைப்பதற்கு இருந்த பீரோ ஒன்றை வீடு மாற்றம் செய்த பின்னர், நாங்கள் சுத்தம் செய்தோம். அப்போது, துணிக்குள் இருந்து செல்லாத 500, 1000 ரூபாய் நோட்டுகள் தவறி விழுந்தது. அதை எண்ணிப்பார்த்த போது, அதில், அடங்கிய 31 ஆயிரத்து 500 ரூபாய் இருந்தது தெரிந்தது.

இதையடுத்து அந்த பணத்தை எடுத்து கொண்டு பல்வேறு வங்கிகளுக்கு சென்று மாற்ற முயன்றேன். ஆனால் அதற்கு அவர்கள் இந்த ரூபாய் நோட்டுகளை மாற்ற முடியாது என்று கூறிவிட்டனர் என்றார். இதுபற்றி மூதாட்டி கமலம்மாள் கூறுகையில், மில்லில் கூலித்தொழில் செய்தபோது சிறுக சிறுக சேமித்த பணமாகும். எனக்கு வயது முதிர்வு காரணமாக அவ்வப்போது பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுகின்றன. எனவே இந்த ரூபாய் நோட்டுகளை அரசு மாற்றித்தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஏக்கத்துடன் கோரிக்கை விடுத்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!