விபத்துக்குள்ளான விமானப்படையின் விமானமானது கிழக்கில் நில ஆய்வு நடவடிக்கைகளுக்காக மலைப்பகுதியூடாக பயணித்துக்கொண்டிருந்த போது மலையொன்றில் மோதியே விபத்துக்குள்ளாகியுள்ளதாகவும் இந்த விபத்து சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஷ நேற்று வெள்ளிக்கிழமை பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
பாராளுமன்றம் நேற்று பிற்பகல் ஒரு மணியளவில் சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் கூடியபோது ஹப்புத்தளையில் இடம்பெற்ற விமான விபத்து சம்பவம் தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவினால் சில கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. இதன்போது எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவிக்கையில்,
விமானப் படையின் வை-12 ரக விமானமொன்று வீரவிலவில் இருந்து இரத்மலானை நோக்கி பயணிக்கும் போது விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிய வந்துள்ளதுடன் இதில் விமானப் படையை சேர்ந்த 4 பேர் உயிரிழந்துள்ளனர் என அறியமுடிகின்றது. எவ்வாறாயினும் இந்த சம்பவம் உண்மையாக இருக்கக் கூடாது என்றே நான் இவ்வேளையில் பிரார்த்திக்கின்றேன். எவ்வாறாயினும் இந்த சம்பவம் இடம்பெற்றிருந்தால் எதிர்க்கட்சி சார்பிலும் சபையில் அமர்ந்துள்ள அனைவர் சார்பிலும் எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றேன் என்றார்.
இதனைத் தொடர்ந்து இச்சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்த பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஷ குறிப்பிடுகையில், குறித்த விமானம் இரத்மலானையிலிருந்து வீரவிலவுக்கு சென்று பின்னர் அங்கிருந்து மலைப் பிரதேசத்திற்கு சென்று கிழக்கு நிலப்பகுதியில் ஆய்வு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக சென்றுகொண்டிருந்த போது விமானம் சற்று தாழ்வாக பறந்துகொண்டிருந்த வேளையில் ஹப்புத்தளை பகுதியில் மலையொன்றில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாகவே அறிய முடிகின்றது.
இதில் இரண்டு விமானிகளும் இரண்டு ஆராய்ச்சி உதவியாளர்களும் பயணித்துள்ள நிலையில் அவர்கள் நால்வரும் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக எமது கவலையை தெரிவித்துக்கொள்வதுடன் இதுபற்றி விரிவான விசாரணை நடத்தப்படும். அதன் விசாரணை அறிக்கையை சபையில் சமர்ப்பிக்க விரைவில் நடவடிக்கையெடுப்போம் என்றார்.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!