வடகொரிய தலைவரின் ஹொட்டல் அறைக்கான மொத்த செலவையும் அமெரிக்கா ஏற்றுக் கொள்ள வேண்டும்!

வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் சிங்கப்பூரில் தங்கவிருக்கும் ஹொட்டல் அறைக்கான மொத்த செலவையும் அமெரிக்காவே ஏற்றுக் கொள்ள வேண்டும் என அந்த நாட்டு அதிகாரிகள் கோரிக்கை வைத்துள்ளனர். அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்புடன் வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் எதிர்வரும் 12 ஆம் திகதி சந்தித்து பேச உள்ளார்.

இதற்கான ஆயத்த பணிகள் முழு வீச்சுடன் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சிங்கப்பூரில் கிம் ஜாங் உன் தங்கவிருக்கும் Fullerton ஹொட்டலின் செலவு மொத்தவும் அமெரிக்காவே ஏற்றுக் கொள்ள வேண்டும் என வடகொரியா கோரிக்கை வைத்துள்ளது. குறித்த ஹொட்டலில் ஒரு இரவுக்கான கட்டணம் 6,000 டொலர் என கூறப்படுகிறது. 1928 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் இந்த ஹொட்டலில் விருந்தினராக தென் கொரிய தலைவரும் கலந்து கொள்ளலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

வடகொரியாவின் கோரிக்கையை உடனடியாக ஏற்றுக் கொள்ள அமெரிக்கா மறுத்த நிலையில், அணுஆயுத ஒழிப்புக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்டு வரும் சர்வதேச அமைப்பான ICAN கிம் ஜாங் உன் தங்கும் ஹொட்டல் அறை கட்டணங்களை செலுத்த ஒப்புக்கொண்டுள்ளது. இந்த ஆண்டு துவக்கத்தில் தென் கொரியாவில் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக் தொடரின்போது, வடகொரியாவில் இருந்து பங்கேற்ற வீரர்கள் மற்றும் கலைஞர்களுக்கான மொத்த செலவையும் தென் கொரியாவே ஏற்றுக் கொண்டது. குறித்த நிகழ்வுக்காக சுமார் 2.6 மில்லியன் டொலர் செலவிட்டுள்ளதாக தென் கொரியா அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!