வடக்கு கிழக்கு தமிழர்கள் ஒற்றுமையாக இல்லாவிட்டால் மீண்டும் ஒரு வியாழேந்திரன் உருவாகக்கூடும். சீ.வி.கே அதிரடி.

அனைவரும் ஒரு தலைமையின் கீழ் நிற்க வேண்டும். அந்தத் தலைமைக்கு கட்டுப்பட்டவர்களாக இருக்க வேண்டும். சுயநலம் கொண்டவர்கள் ஓரிடத்துக்குப் போனால் நாங்கள் இன்னும் சில வியாழேந்திரன்களை உருவாக்க முடியும் என வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு தகவல் வழங்கிய அவர்,

“வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தல் என்பது ஒரு சவால் மிக்க தேர்தலாக இருக்கும். ஏனென்றால் எங்களோடு இருந்த எல்லோரும் பிரிந்து நின்று கூறு கூறாக தேர்தல்களில் பங்குபற்றுகின்றார்கள். ஒரு கூட்டமைப்பு அல்லது கூட்டு ஏற்படுத்தப்படும் அல்லது ஏற்படுத்த முயற்சி முன்னெடுக்கப்படுகிறது.

ஆகவே தேர்தல் சவாலாக இருக்குமென்பது உண்மை. ஆனால் இறுதியாக தேர்தல்களில் பல அணிகள் உதிரிகளாகப் போட்டியிட்டாலும் அவற்றையெல்லாம் நிராகரித்து மக்கள் தமிழ்த் தேசிய கூட்டமைப்பை தெரிவு செய்வார்கள். ஒட்டுமொத்தமாக கூட்டமைப்பை தெரிவு செய்ய வேண்டிய தேவையும் இருக்கிறது. ஏனென்றால் சில்லறையாக, உதிரிகளாக பாராளுமன்றத்திற்குச் சென்று சாதிக்க முடியாது. ஒரு பலமாக நிற்க வேண்டும்.

நான் ஏற்கனவே சொன்னது போல ஒரு தலைமையின் கீழ் நிற்க வேண்டும். அந்தத் தலைமைக்கு கட்டுப்பட்டவர்களாக இருக்க வேண்டும். சுயநலம் கொண்டவர்கள் ஓரிடத்துக்குப் போனால் நாங்கள் இன்னும் சில வியாழேந்திரன்களை உருவாக்க முடியும்.

ஆகவே அதைத் தவிர்ப்பது என்றால் கூட்டமைப்பை முழுமையான ஒரு தலைமைத்துவம் கொண்ட அமைப்பாக, கட்சியாக மக்கள் தேர்ந்தெடுப்பார்கள். பலகால வரலாற்றில் அதுவே நடந்திருக்கிறது. அதையே மக்கள் செய்வார்கள் என்று நம்புகின்றேன்.

ஆகவே தேர்தல் நாள் வரைக்கும் பெரிய சவாலாக இருக்கின்ற விடயம். தேர்தலன்று மாறி மக்கள் கூட்டமைப்பை நிச்சயமாக ஆதரிப்பார்கள் என்ற திடமான நம்பிக்கை எனக்குண்டு.

மேலும் ஈ.பி.டி.பி.யைத் தவிர ஏனைய அனைவரும் எங்களிடம் இருந்து போனவர்கள் தான். ஆனபடியால் கூட்டமைப்புக்கு கிடைத்த வாக்குகளை அவர்கள் பிரித்திருந்தால் உடைத்துக் கொள்வார்கள் என்பது உண்மை. ஆனால் எந்தவகையிலும் ஒரு தாக்கத்தை எங்களுக்கு எற்படுத்தக் கூடிய கூட்டணியாக அல்லது எதிரணியாக அது அமையாது.

இப்பொழுது அவ்வாறான எதிரணிகள் என்றெல்லாம் பேச்சுகள் இடம்பெறுவது இயல்பு. ஆனால் தேர்தல் நாள் முடிவில் மக்கள் எங்கள் பக்கம் தான் நிற்பார்கள். எல்லாக் காலத்திலும் வரலாறு அப்படித் தான் சொல்லியிருக்கிறது.

குறிப்பாக 2004 தேர்தலில் எந்தளவுக்கு வெற்றி பெற்றோம். எத்தனை இலட்சமாக வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றவர்கள் எல்லாம் அதன் பின் வெளியேறி என்னத்தைப் பெற்றார்கள்? மக்கள் என்ன தீர்ப்பு வழங்கினார்கள் என்று பார்க்க வேண்டும். அந்த மாதிரியான ஒரு நிலை இந்தத் தேர்தலிலும் ஏற்படும்.

இதே வேளை கூட்டமைப்பிலிருந்து போனவர்கள் திரும்பி வரலாம். அதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று நான் கூட சொல்லியிருந்தேன். ஆனால் என்னைப் பொறுத்தவரையில் அவ்வாறாக வருவதற்கான சூழல் ஏற்படுமென்று நான் எதிர்பார்க்கவில்லை. ஆகவே உதிரிகளாக போட்டி போடுகின்ற நிலைமை தான் ஏற்படுமென்று நான் நம்புகின்றேன்.

அவ்வாறு உதிரிகளாக போட்டியிட்டால் மக்கள் தங்களது தீர்ப்பை மிகத் தெளிவாக பலமாக இருந்து பேசக் கூடிய, செயற்படக் கூடிய ஒரு கட்டமைப்பாக கூட்டமைப்பு தொடர்ந்து இருக்கின்ற காரணத்தினால் இன்னுமொரு பரீட்சார்த்தங்களுக்குப் போகாமல் இன்னொருவரை நம்பி ஏமாறுகின்ற நிலைக்கு போகாமல் கூட்டமைப்பை ஆதரிக்க வேண்டுமென்பது தான் என்னுடைய நிலைப்பாடு.

மக்கள் நலன் சார்ந்து, தேசிய நலன் சார்ந்து, தமிழ் தேசிய இனம் சார்ந்து கூட்டமைப்பு என்ற கட்டமைப்பு பலமாக இருக்க வேண்டும். அதற்கான ஆதரவை மக்கள் தர வேண்டும். ஆகவே விருப்பமில்லாதவர்கள் யாராவது இருந்தால் அவர்களைத் தவிர்த்து ஏனையவர்களைத் தெரியு செய்யுங்கள் .

எதற்காகவும் கட்சியைக் கைவிடாமல் கட்சிக்கு வாக்களியுங்கள். கட்சியை ஆதரிக்க வேண்டிய தேவை மக்களுக்கு இருக்கிறது. அதனை மக்கள் நிச்சயமாக செய்வார்கள் என்பது என்னுடைய வரலாற்று அனுபவத்தில் பார்த்திருக்கிறேன். அவ்வாறே செய்வார்கள் என்று நான் திட மாக நம்புகிறேன்“ என்று குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!