காதலனுக்காக மொபைல் போன்களை திருடிய கல்லூரி மாணவிகள்: – அதிர்ச்சி வாக்குமூலம்

ஒரே காதலனுக்காக இரண்டு கல்லூரி மாணவிகள் 38 மொபைல் போன்களை திருடி காவல்துறையினரிடம் சிக்கிய வினோதமான சம்பவம் மும்பையில் அரங்கேறியுள்ளது. மராட்டிய மாநிலம் மும்பையின் மின்சார ரயில்களில் பெண் பயணிகளின் மொபைல் போன்கள் காணாமல் போகும் சம்பவங்கள் கடந்த 2 மாதங்களில் அதிகரித்து வந்தது.

இது தொடர்பாக பயணிகள் ரயில்வே துறையினரிடம் புகார்கள் அளித்தனர். பெரும்பாலான திருட்டு சம்பவங்கள் பெண்கள் பயணிக்கும் பெட்டிகளில், குறிப்பாக போரிவாலி – சாண்டாகுரூஸ் ரயில் நிலையங்களுக்கு இடையே தான் நடைபெற்றுள்ளது என்பதை ரயில்வே குற்றப்புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் கண்டறிந்தனர். இது தொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டதை அடுத்து, கடந்த மே 30ஆம் திகதி காலை நேரத்தில் பெண் காவலர் ஒருவர் சீருடை இல்லாமல் பொதுவான உடையில் போரிவாலி ரயில் நிலையத்தில் ரயிலில் ஏறினார்.

அப்போது, செல்போனை திருடிய டிவிங்கிள் சோனி என்ற 20 வயது கல்லூரி மாணவியை பெண் காவலர் கையும் களவுமாக பிடித்தார். கட்டிடக்கலை பிரிவு மாணவியான சோனியின் பையில் இருந்து 9 விலையுயர்ந்த செல்போன்களை கைப்பற்றியுள்ளனர்.

மேலும் அவரைப் போலவே செல்போன்களை திருடிய டீனா பர்மர் என்ற 19 வயது கல்லூரி மாணவியும் சிக்கினார். பின்னர் இருவரும் கைது செய்யப்பட்டனர். இவர்கள் இருவரும் திருடிய செல்போன்களை ராகுல் ராஜ்புரோகித் என்பவரிடம் விற்பனை செய்துள்ளது தெரியவந்ததைத் தொடர்ந்து ராகுலையும் பொலிசார் கைது செய்தனர். இரண்டு கல்லூரி மாணவிகளும் சுமார் 3 லட்சம் ரூபாய் அளவிற்கு ராகுலிடம் செல்போன்களை விற்பனை செய்துள்ளது தெரியவந்துள்ளது.

செல்போன்கள் திருடி கைதுசெய்யப்பட்ட இருவரில் டீனா என்பவர் முதலாம் ஆண்டு கலைக் கல்லூரி மாணவி ஆவார். இருவரிடமும் காவல்துறையினர் நடத்திய விசாரணையின் போது திடுக்கிடும் உண்மையை போட்டுடைத்தனர். மாணவிகளான இருவரும் கல்லூரிக்கு மின்சார ரயிலில் காலை மற்றும் மாலை வேளைகளில் சென்று வரும் போது திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளனர். இருவருமே ஹிருஷி சிங் என்ற வாலிபரை காதலித்து வந்ததும், இவருக்காகவே தாங்கள் செல்போன்களை திருடியதாகவும், திருடிய செல்போன்கள் மூலம் கிடைத்த பணத்தை காதலருக்கு அளித்து வந்த அதிர்ச்சிகர விவரமும் காவல்துறையினருக்கு தெரியவந்தது.இருவரிடம் இருந்தும் 38 விலையுயர்ந்த செல்போன்களும், 30 மெமரி கார்டுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. தற்போது அவர்கள் இருவரும் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!