கட்டுக்கடங்காத கொரோனா: மும்பையில் மேலும் ஒருவர் உயிரிழப்பு!

சீனாவில் இருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா வைரசுக்கு 16 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இதுவரை பலியாகி உள்ளனர். இந்தியாவிலும் கடந்த சில தினங்களாக கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. 500க்கும் மேற்பட்டோர் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசு உத்தரவின் பேரில் அனைத்து மாநிலங்களிலும் வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் திவிரப்படுத்தப்பட்டுள்ளன. இருந்தாலும் வைரசின் தீவிரத்தை கட்டுப்படுத்த முடியவில்லை.

நாடு முழுவதும் 75 மாவட்டங்கள் முடக்கப்பட்டுள்ளன. பல்வேறு மாநிலங்களில் 144 தடை உத்தரவு, ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மக்கள் நடமாட்டம் குறைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் ஏற்கனவே 9 பேர் பலியான நிலையில், இன்று மேலும் ஒருவர் பலியாகி உள்ளார்.

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் சிகிச்சை பெற்று வந்த 65 வயது நபர் உயிரிழந்தார். இவர் துபாயில் இருந்து திரும்பிய பின்னர் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர் மரணம் அடைந்ததையடுத்து, இந்தியாவில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!