ஊரடங்குச் சட்டத்தினால் சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் அதிகரிப்பு!

நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் தொடர்பான முறைப்பாடுகள் 33 சத வீதத்தினால் அதிகரித்திருப்பதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் பேராசிரியர் முதித விதானபதிரண தெரிவித்துள்ளார்.

இம்முறைப்பாடுகளில் பாலியல் ரீதியான துஷ்பிரயோக முறைப்பாடுகள் பதிவாகவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஊரடங்குச்சட்டம் அமுலில் உள்ள காரணத்தினால் வன்முறையைப் பிரயோகிக்கும் நபரும் பாதிக்கப்படும் சிறுவரும் வீட்டுக்குள் முடங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருப்பதே இதற்குக் காரணமாகும்.

நாட்டில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்ட பின்னர் சிறுவர்களுடன் சம்பந்தப்பட்ட சம்பவங்கள் தொடர்பில் நாளாந்தம் சுமார் 40 முறைப்பாடுகள் கிடைக்கப்பெறுவதுடன் அவற்றில் 10 சத வீதமானவை சிறுவர் துஷ்பிரயோகங்களுடன் தொடர்புபட்டனவாகும்.

ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டதன் பின்னரான 7 நாட்களில் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு 111 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன. அவற்றில் 36 முறைப்பாடுகள் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான முறைபாடுகளாகும்.

எனவே ஊரடங்குச் சட்டம் அமுலிலுள்ள இக்காலப்பகுதியில் சிறார்களை, பிள்ளைகளை பொறுப்புடன் பாதுகாப்பாகவும் கவனித்துக கொள்ளும் பொறுப்பு பெற்றோர்களுக்கு உள்ளது. தற்போது சிறுவர்கள் வீடுகளுக்குள் முடங்கிப்போய் உள்ள நிலையில் அவர்களது மனநிலை குறித்த புரிதலை பெரியோர் வளர்த்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும். சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் எமக்குக் கிடைக்கப் பெறும் முறைப்பாடுகள் தொடர்பில் ஆராய்ந்து நாம் உரிய சட்டநடவடிக்கைகளை மேற்கொள்வோம் என்பதையும் நினைவில்கொள்ள வேண்டும் என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!