ஆசையாக பீட்சா ஆர்டர் செய்த 72 குடும்பங்கள்… கொரோனாவால் தனிமைப்படுத்தப்பட்டுள்ள கொடுமை!

டெல்லியில் ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. ஆசையாக பீட்சா வாங்கி சாப்பிட்டவர்கள் நிலைமை இப்போது பரிதாபமாகியுள்ளது.

பீட்சா டெலிவரி செய்த நபருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால், அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவரிடம் பீட்சா டெலிவரி பெற்ற 72 வீட்டுக்காரர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

டெல்லியில்தான் இந்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. மால்வியா நகர் என்ற பகுதியில் பீட்சா டெலிவரி செய்து வந்தவர் பிஎம் மிஸ்ரா. பிரபலமான ஒரு பீட்சா நிறுவனத்தில் இவர் டெலிவரி பாயாக வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில்தான் நேற்று முன்தினம் இவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து உடன் வேலை பார்த்த 16 பேர் தனிமைப் படுத்தப் பட்டுள்ளனர்.

மேலும் அவர் எங்கெல்லாம் பீட்சா டெலிவரி செய்தாரோ அந்த இடங்கள் அனைத்துமே சுகாதாரத் துறையினரால் டிரேஸ் செய்யப்பட்டன.இதன் அடிப்படையில் அவர் 72 வீடுகளுக்கு டெலிவரி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அந்த வீட்டுக்காரர்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியே போகக் கூடாது, வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. காய்கறி போன்ற அத்தியாவசிய பொருட்கள் கூட அவர்களுக்கு வீடுகளுக்கே சென்று சப்ளை செய்ய வேண்டிய நிலை உருவாகியுள்ளது.

பீட்சா டெலிவரி செய்யும் போது கையுறை, முக கவசம் போன்றவற்றை அணிந்து கொண்டு தான் அதைச் செய்யவேண்டும் என்று கடும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. அதை பின்பற்றி தான் இவ்வாறு டெலிவரி செய்யப்பட்டுள்ளது.

எனவே அவரிடம் பீட்சா டெலிவரி பெற்றவர்கள் பலருக்கும் நோய் பரவுவதற்கான வாய்ப்பு குறைவாக இருந்தாலும், தற்காப்பு நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக சுகாதார துறை கூறியுள்ளது.