கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களில் 80 சதவீதம் பேருக்கு எந்த அறிகுறியும் இல்லை – இந்திய விஞ்ஞானி வேதனை!

கொரோனா தொற்று பரவலின் வேகம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்தியாவில் 17 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். பலி எண்ணிக்கை 500-க்கும் மேல் உயர்ந்துவிட்டது. பொதுவாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முன்பு தும்மல், இருமல், சளி, காய்ச்சல் மற்றும் மூச்சு விடுவதில் சிரமம் போன்ற அறிகுறிகள் தென்படும் என்று கூறப்பட்டது. ஆனால் தற்போது அந்த விதமான எந்த அறிகுறிகளும் தென்படாமல் தொற்று பரவுவதாக கண்டறியப்பட்டு இருக்கிறது.

இதுதொடர்பாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலைச் சேர்ந்த மூத்த விஞ்ஞானி கங்கா கேத்கர் கூறும்போது, ‘இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 80 சதவீதம் பேருக்கு நோய் தொற்றுக்கான எந்தவித அறிகுறிகளும் தென்படவில்லை. இதனால் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது’ என்று அவர் கவலை தெரிவித்து உள்ளார்.

இதுபற்றி அவர் மேலும் கூறுகையில், ‘அறிகுறி இல்லாதவர்களுக்கு தொற்று இருக்கிறதா? என்பதை கண்டறிவது சிரமமான ஒன்று. எனவே ஏற்கனவே தொற்று இருக்கும் நபர்களின் தொடர்பு நிலைகளை கொண்டு, அதன் தடங்களை அறிந்து அதன் வழியாகவே கண்டுபிடிக்க முடியும். சோதனை முறையில் வேறு எந்த மாற்றத்தையும் கொண்டு வர முடியாது. பாதிப்பு எண்ணிக்கை இனி அதிகரிக்க வாய்ப்பு இருக்காது. மே 2-வது வாரத்தில் இதை சிறந்த முறையில் கணிக்க முடியும்’ என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!