கொரோனா கட்டுப்பாடுகளுக்கு அமைய முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு!

முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலைகளின் 11 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முற்றத்தில் எதிர்வரும் 18ஆம் திகதி நடைபெறும் என்று முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் குழு அறிவித்துள்ளது.

கொரோனா பரவல் காரணமாக, தற்போது நாட்டில் நடைமுறையில் உள்ள கட்டுப்பாட்டு நடைமுறைகள், சட்டங்கள் ஆகியவற்றுக்கு மதிப்பளித்து- அவற்றைக் கடைப்பிடித்தவாறு, இந்த நினைவேந்தல் நிகழ்வு இடம்பெறும், என்றும் நினைவேந்தல் குழு தெரிவித்துள்ளது.

அத்துடன், உள்ளூர் வளங்களை ஒன்று திரட்டி, பயன்படுத்துவதன் மூலம் இந்த நினைவேந்தல் நிகழ்வு எளிமையாகவும் உரிய முறைப்படியும் மேற்கொள்ளப்படும் என்றும், அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, இது தொடர்பாக, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் குழு நிதி திரட்டல் நடவடிக்கைகள் எதிலும் ஈடுபடாது என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த நினைவேந்தல் நடவடிக்கைகளில், அனைத்துப் பொது அமைப்புக்கள் ,பொதுமக்கள் அனைவரையும், தம்முடன் இணையுமாறு கேட்டுக் கொண்டுள்ள நினைவேந்தல் குழு, நினைவேந்தல் தொடர்பான நிகழ்ச்சி ஒழுங்குகள் பற்றிய விபரம் பின்னர் அறியத் தரப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!