சிறிதரன் இன்று விசாரணைக்கு அழைப்பு!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் அருணாசலம் வேழமாலிகிதன் ஆகியோர் கிளிநொச்சி பொலிஸாரால் இன்று விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

சர்வதேச மகளிர் தினமான கடந்த மார்ச் 8ம் திகதி, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட மகளிர் அணியின் ஏற்பாட்டில், தமிழ்த் தேசிய மகளிர் தின நிகழ்வுகள் பசுமைப் பூங்கா வளாகத்தில் நடைபெற்றது.

குறித்த நிகழ்வில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த திருவுருவப் படங்கள் தொடர்பாக, கொக்காவில் இராணுவ முகாமைச் சேர்ந்த இராணுவத்தினரால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறி, கடந்த மார்ச் 13ம் திகதி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் அருணாசலம் வேழமாலிகிதன் ஆகியோர் கிளிநொச்சி பொலிஸாரால் விசாரணைக்காக அழைக்கப்பட்டிருந்தனர்.

இந்த விசாரணை நடைபெற்று இரண்டு மாதங்களுக்குப் பின்னர், அதே விடயம் தொடர்பான, மேலதிக விசாரணைக்காக இன்று மீளவும் பொலிஸ் நிலையத்திற்கு வருமாறு, இருவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!