நல்லூரில் வயோதிபரின் உயிரிழப்புக்கு காரணமான இளைஞர்கள் கைது!

யாழ்ப்பாணம் – நல்லூர் யமுனா ஏரி வீதியில் தனிமையில் வசித்து வந்த முதியவரின் உயிரிழப்புக்கு காரணமானவர்கள் என்ற குற்றச்சாட்டில் இளைஞர்கள் இருவர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் இருவரும் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் வரும் 9ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது.

யாழ்ப்பாணம், நல்லூர் யமுனா ஏரி வீதியில் தனிமையில் வசித்த முதியவரின் வீட்டுக்கு கடந்த வெள்ளிக்கிழமை சென்ற இளைஞர்கள் இருவர், அங்கு பப்பாசிப்பழம் பறிக்கப் போவதாகத் தெரிவித்துள்ளனர். அவர்களை பப்பாசிப்பழம் பறிக்க முதியவரும் அனுமதித்திருந்தார்.

பப்பாசிப்பழம் பறித்து விட்டதாக முதியவரிடம் தெரிவித்த இளைஞர்கள் இருவரும் முதியவரிடமிருந்து அலைபேசியைப் பறித்து எடுத்துவிட்டு அவரை தள்ளி வீழ்த்திவிட்டுத் தப்பித்துள்ளனர்.

சம்பவத்தையறிந்த அயலவர்கள் முதியவரை மீட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்த்தனர். எனினும் முதியவர் சிசிச்சை பலனின்றி மறுநாள் சனிக்கிழமை இரவு உயிரிழந்தார்.

இந்தச் சம்பவத்தில் முதியவரின் உயிழப்புக்குக் காரணமான இளைஞர்கள் இருவரையும் யாழ்ப்பாணம் புறநகர் பகுதியில் வைத்து பொலிஸார் நேற்றுமுன்தினம் கைது செய்தனர். சந்தேக நபர்களிடம் முன்னெடுக்கப்பட்ட ஆரம்ப கட்ட விசாரணைகளின் பின்னர் அவர்கள் இருவரும் நேற்று யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர்.

வழக்கை விசாரணை செய்த யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.பீற்றர் போல், சந்தேக நபர்கள் இருவரையும் வரும் ஜூன் 9ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டதுடன், அன்றைய தினம் சாட்சிகளை அழைத்து அடையாள அணிவகுப்பை நடத்துமாறும் அறிவுறுத்தினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!