தலைமை அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மா னத்துக்கு எதிராக வாக்களிப்பதற்கு ரணில் விக்கிரமசி்ங்கவுடன் கூட்டமைப்பால் உடன்படிக்கை எதுவும் செய்யப்படவில்லையென கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரான எம்.ஏ சுமந்திரன் தெரிவித்தள்ளமை , மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் குழப்பமடைந்திருப்பதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
தமிழர்களின் பிரச்சினைகள் தொடர்பான 10 கோரிக்கைகளை ரணில் விக்கிரமசிங்க விடம் சமர்ப்பித்து, எழுத்து மூலமான உறுதிமொழியை அவரிடமிருந்து கூட்டமைப்புப் பெற்றுள்ளதாக ஏற்கனவே தெரிவிக்கப்பட்ட நிலையில், சுமந்திரனின் இந்த அறிவிப்பு வெளிவந்தமை குறிப்பிடத்தக் கது.
தொடர்ந்து சிங்கள தலைமைகளால் ஏமாற்றப்படும் தமிழர்கள்
தமிழர்களைப் பொறுத்தவரையில் அவர்கள் தொடர்ந்தும் சிங்களத் தலைமைகளால் ஏமாற்றப்பட்டு வருகின்றனர். சிங்களத் தலைமைகள் எழுத்து வடிவில் உறுதிமொழிகளை வழங்கிவிட்டுப் பின்னர் அவற்றைக் கிழித்து எறிவது இந்த நாட்டைப் பொறுத்த வரையில் புதியதொன்றல்ல.
தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் இந்த நாட்டின் அரசியலில் மிகவும் முக்கியமானதொன் றாக நோக்கப்பட்டது. இது வெற்றிபெறுமாயின், நாட்டின் ஆட்சியில் பெருமாற்றம் ஏற்படுமென்ற பெரிய எதிர்பார்ப்பு நிலவியது.ரணில் விக்கிர மசிங்க தமது தலைமை அமைச்சர் பதவியைத் துறந்து விடுவதற்கான சாத்தியமும் அதிகளவில் காணப்பட்டது.
மகிந்த தரப்பினர் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கான பெருமுனைப்பில் இருந்ததால், எந்த வகையிலேனும் பிரேரணயை வெற்றிபெற வைக்க வேண்டும் என்ற துடிப்புடன் செயற்பட்டனர். அரச தலைவர், தலைமை அமைச்சரைப் பதவி விலகிவிடுமாறு கேட்டுக்கொண்டதன் பிரகாரம் பிரேரணைக்கு ஆதரவான சைகையை வெளிக்காட்டியிருந்தார்
நாட்டில் ஓரளவு சுமுக நிலை நிலவுவதை மறுப்பதற்கில்லை
கடந்த மூன்று ஆண்டுகளாக நாட்டில் ஒருசில சம்பவங்களைத்தவிர, அமைதி நிலவியதைக் காணக்கூடியதாகவிருந்தது. தமிழர் பிரதேசங்களில் முன்பு இருந்ததைப் போன்று படையினரின் கெடுபிடிகளும் காணப்படவில்லை. இதனால் இங்குள்ள மக்கள் தமது அடிப்படைப் பிரச்சினைகள் தீராத நிலையிலும், ஓரளவு நிம்மதியு டன் வாழ்ந்து வருகின்றனர்.
கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனும், நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிராக வாக்களிப்பதற்கு இதையே காரணமாகக் கூறியிருந்தார்.
கூட்டமைப்பின் ஆதரவு கிடைக்காவிட்டாலும் நம்பிக்கையில்லாப் பிரேரணை தோற்கடிக்கப்பட்டிருக்கும் என்பதை இறுதி நிலவரங்கள் எடுத்துக் காட்டிய போதிலும், அதன் ஆதரவு ரணில் விக்கிரம சிங்கவுக்கு அரசியல் ரீதியில் மிகப்பெரிய பலத்தைக் கொடுத்திருந்ததை, மறுத்துவிட முடியாது. கூட்டமைப்பு ஆதரவு தெரிவிக்க முன்வந்தமை ஏனைய சிறுபான்மைக் கட்சிகளுக்கும் ஒர் உந்து சக்தியாக இருந்தமையையும் மறுத்து விட முடியாது.
தீர்க்கப்படாது தொடரும் தமிழ் மக்களது பிரச்சினைகள்
போர் ஓய்ந்து பல வருடங்கள் ஆகிவிட்ட போதிலும் தமிழர்களின் வாழ்க்கையில் தீர்க்கப்ப டாத பல பிரச்சினைகள் தொடர்ந்தவண்ணமே உள்ளன. இவற்றுக்குத் தீர்வு காணப்படுமென அரச தலை வரும், தலைமை அமைச்சரும் வழங்கிய உறுதிமொழிகள் நிறைவேற்றப்படவி்ல்லை.
மாறாக இறுதிப் போரின்போது, போர்க்குற்றங்களிலும்,மனித உரிமை மீறல்களிலும் ஈடுபட்டவர்களைக் காப்பாற்றுகின்ற செயற்பாடுகளே இடம் பெறுகின்றன. படையினரை விசாரணைக்கு உட்படுத்துவதற்கு ஒருபோதுமே இணங்கப் போவதில்லையென அரச தலைவர் பகிரங்கமாகத் தெரிவித்துவிட்ட நிலையில், இது தொடர்பாக அவரிடம் மேலதிகமாக வேறு எதையும் எதிர்பார்க்க முடியாது.
ஆனால் பெரும் இக்கட்டான நிலையில் இருந்த ரணில் விக்கிரமசிங்க தமிழர் பிரச்சினையில் தலையிட்டுத் தீர்வு காண வேண்டிய கட்டாயத்தில் இருந்தார். இதனால் அவர் கூட்டமைப்பின் கோரிக்கைகளுக்கு இணங்கியிருப்பாரென்ற நம்பிக்கை தமிழர்களிடம் காணப்பட்டது. ஆனால் சுமந்திரனின் கருத்துக்கள் அந்த நம்பிக்கையைத் தகர்த்தெறிந்துவிட்டன.
கூட்டமைப்புக்கு எதிரானவர்களுக்கு இதுவொரு நல்ல சந்தர்ப்பத்தையும் வழங்கி விட்டது. கூட்டமைப்பின் செயற்பாடுகளால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளதைக் கடந்த உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள் எடுத்துக்காட்டிவிட்டன. இதைச் சீர் செய்யவேண்டிய மிகப்பெரிய பொறுப்பும் கூட்டமைப்புக்கு உண்டு.
தலைமை அமைச்சருக்கு எதிரான நம்பி்க்கையில்லாத் தீர்மானம் நல்லதொரு வாய்ப்பை வழங்கியிருந்தது.இதை நன்கு பயன்படுத்தியிருந்தால் ஒரு சில அனுகூலங்களையாவது பெற்றிருக்க முடியும். ஆனால் அதையும் கூட்ட மைப்பு தவற விட்டுள்ளது, என்றே கருத வேண்டியுள்ளது.
தமிழர்களின் தலையாய தலைமைப் பொறுப்பை வகித்துவரும் கூட்டமைப்பு, நிலையான தீர்மானங்களைச் சரியாக எடுக்கமாட்டாமல் தடுமாறுவதை மக்கள் ஒருபோதுமே ஏற்க மாட்டார்கள் என்பதைக் கூட்டமைப்பின் தலைமை புரிந்து கொள்ள வேண்டும்.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!