ஹூல் மீதான குற்றச்சாட்டு- உடனடியாக பதிலளிக்க மறுப்பு!

தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர் பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூல் தமிழ் ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள பேட்டியில் அவர் என்ன கூற முனைந்துள்ளார் என்பதை மொழிபெயர்ப்பின் மூலம் அறிந்து கொண்டு- அவரோடு அது தொடர்பில் கலந்துரையாடிய பின்னரே, தேர்தல் ஆணையாளர் என்ற வகையில் அதைப் பற்றி நான் எனது கருத்தை வெளியிட முடியும் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

மேற்படி விவகாரம் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவரிடம் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய அது தொடர்பில் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

மேற்படி விவகாரம் தொடர்பில் நான் இரண்டு விடயங்களை குறிப்பிட விரும்புகின்றேன். அவரது கருத்தை வெளியிட்டது ஒரு தமிழ் ஊடகம் என்பதால் அதற்கு சட்டபூர்வமான மொழிபெயர்த்தல் ஒன்று அவசியமாகிறது.

அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு மொழிபெயர்ப்பாளரினால் அந்த மொழி பெயர்ப்பு மேற்கொள்ளப்பட வேண்டும்.

அதேவேளை அந்த மொழிபெயர்ப்பு மட்டும் போதாது. மறுபக்கம் அந்த கருத்தை வெளியிட்டுள்ள எமது ஆணைக்குழுவின் சம்பந்தப்பட்ட உறுப்பினர் இந்தக் கருத்தின் ஊடாக எதை சொல்ல விளைகின்றார் என்பதை அறிய வேண்டும். இது இரண்டையும் செய்யாமல் என்னால் தன்னிச்சையாக எனது கருத்து எதையும் தெரிவிக்க முடியாது.

அதேபோன்று அவரவர் கருத்துக்களை அவரவரே பொறுப்பேற்க வேண்டும். அத்துடன் அவர் என்ன தெரிவித்துள்ளார் என்ன கருத்துப்பட அவர் அதை கூறியுள்ளார். என்பதை அவரிடமிருந்தே நாம் தெளிவாக கேட்டுக் கொள்ளவேண்டும்.

அவ்வாறு பெற்றுக் கொண்டு தான் என்னால் எதையும் கூற முடியும். அவர் இல்லாத எந்த சந்தர்ப்பத்திலும் அவரிடம் அதுபற்றி கேட்காமலும் என்னால் எதுவும்கூற முடியாது.

அதைவிடுத்து நான் செயற்பட்டால் நான் அவருக்கும் நாட்டு மக்களுக்கும் செய்கின்ற தவறாக அது அமையும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!