பலாலி விமான நிலைய அபிவிருத்தி – இந்தியாவுடன் விரைவில் உடன்பாடு!

பலாலி சர்வதேச விமான நிலையம் இந்தியாவின் உதவியுடன் துரிதமாக அபிவிருத்தி செய்யப்படும் என்று, சுற்றுலா மற்றும் விமான சேவைகள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

பலாலி விமான நிலைய அபிவிருத்தி தொடர்பாக, இந்திய அரசாங்கத்துடன் விரைவில் இலங்கை அரசாங்கம் உடன்பாடு ஒன்றை செய்து கொள்ளும். ஏற்கனவே இந்த உடன்பாட்டை செய்து கொள்வதற்கு திட்டமிடப்படிருந்த நிலையில், கொரோனோ தொற்றினால், தாமதம் ஏற்பட்டுள்ளது.

நாடு படிப்படியாக இயல்பு நிலைக்குத் திரும்பி வருவதால், பாலாலி விமான நிலையத்தின் அபிவிருத்திப் பணிகளை விரைவுபடுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

கடந்த ஆண்டு பலாலி சர்வதேச விமான நிலையம் திறந்து வைக்கப்பட்ட போது, அதன் அபிவிருத்திக்காக இந்தியா 300 மில்லியன் ரூபாவை வழங்குவதாக இந்தியா உறுதியளித்திருந்தது.

புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் முன்மொழியப்பட்டுள்ளவாறு, பலாலி விமான நிலையத்தின் முனையப் பகுதி, மின்சார வசதி, மற்றும் போக்குவரத்து வசதிகள் போன்றன அபிவிருத்தி செய்யப்படவுள்ளன என்றும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!