கொரோனாவிலிருந்து தன்னை பாதுகாத்துக்கொள்ள புதின் எடுத்த முடிவு!

சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது பெரும் மனித உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை சுமார் 4 லட்சத்து 50 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். உலகையே உலுக்கி வரும் இந்த கொடிய வைரஸ் பல்வேறு நாட்டு அரசியல் தலைவர்களையும் விட்டு வைக்கவில்லை. இங்கிலாந்து பிரதமர் ஜான்சன், ஹோண்டுராஸ் அதிபர் ஆர்லேண்டோ ஹெர்னாண்டஸ் என பல நாட்டின் தலைவர்களுக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது. இதற்கிடையில், ரஷியாவிலும் கொரோனா தீவிரமடைந்து வருகிறது. அந்நாட்டு பிரதமர் மிக்கைல் மிசுஸ்டினுக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டது.

மேலும், மாஸ்கோவில் உள்ள கொரோனா சிறப்பு மருத்துவமனை தலைமை டாக்டருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டது. இந்த இருவரையும் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் சந்தித்துள்ளார். இதையடுத்து, அதிபர் புதின் தனக்கு கொரோனா வைரஸ் பரவிவிடக்கூடாது என்ற எண்ணத்தோடு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளார். அதன்படி, அவர் கிரிம்லின் மாளிகையை விட்டு வெளியேறி மாஸ்கோவிற்கு வெளிப்புறத்தில் உள்ள அதிபர் குடியிருப்பில் தன்னைத்தானே தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார்.

ஆனாலும், அந்த குடியிருப்பில் இருந்தபடியே பணிகளை மேற்கொள்ளும் புதின் சில சமயங்களில் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். அவ்வாறு பொது நிகழ்ச்சிகளுக்கு வரும் புதின் எந்தவித முகக்கவசமும் அணியாமல் சாதாரணமாகவே இருக்கிறார். இந்நிலையில், அதிபரை சந்திக்க அதிகாரிகள், தொழில்துறையினர் என பலர் புதின் தங்கியிருக்கும் குடியிருப்புக்கு வந்து செல்கின்றனர்.

இதனால் கொரோனா வைரஸ் பரவிவிடலாம் என்ற எண்ணத்தை கருத்தில் கொண்டு அதிபர் புதினை சந்திக்க அவரும் அனைவரும் சந்திப்பிற்கு முன்னதாக கொரோனா பரிசோதனை கட்டாயம் மேற்கொள்ள வேண்டும் என அதிபரின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

மேலும், அதிபரின் குடியிருப்பு அவரை சந்திக்க வருபவர்கள் அங்கு அமைக்கப்பட்டுள்ள கிருமி நாசினி தெளிப்பான் இயந்திரத்தின் வழியாகவே வரவேண்டும் என தெரிவிக்கபட்டுள்ளது. இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் மூலமாக புதின் கொரோனா வைரசில் இருந்து தன்னை தற்காத்துக்கொள்ள விரும்புவதாக பரவலான தகவல்கள் வெளியாகி வருகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!