இறந்த தாயின் உடலுடன் 3 நாட்கள் இருந்த பெண் டாக்டர்

மீண்டும் எழுந்து வருவார் என்று இறந்த தாயின் உடலுடன் பெண் டாக்டர் 3 நாட்கள் இருந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் செர்புழச்சேரியை சேர்ந்தவர் ஓமனா (வயது 72). இவருடைய கணவர் ஸ்ரீதரன் பிள்ளை இறந்து விட்டதால் ஓமனா தனது மகள் கவிதா (42) என்பவருடன் வசித்து வந்தார். ஓமனா தலைமை ஆசிரியையாக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். கவிதா ஓமியோபதி டாக்டராக இருந்து வருகிறார். இந்த நிலையில் உடல்நலக்கோளாறு காரணமாக ஓமனா கடந்த சில தினங்களுக்கு முன்பு இறந்து விட்டார்.

இதுகுறித்து கவிதா தனது உறவினர்களிடம் தெரிவிக்காமல் தாயின் பிணத்துடன் இருந்துள்ளார். அவர் மீண்டும் எழுந்து வருவார் என்ற நம்பிக்கையில் அவர் பிணத்துடன் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பிணத்தில் இருந்து துர்நாற்றம் வீசியதால் அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் செர்புழச்சேரி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர். பின்னர் பிணத்துடன் இருந்த கவிதாவிடம் விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர் தனது தாயார் மீண்டும் எழுந்து வருவார் என்று நம்பி இருந்ததாக தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் ஓமனாவில் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து கவிதாவிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இறந்த தாயின் உடலுடன் பெண் டாக்டர் 3 நாட்கள் இருந்த சம்பவம் அந்த பகுதியில் பொதுமக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!