கிழக்கை சிங்கள மயப்படுத்துவதே செயலணியின் நோக்கம்! – ஜனாதிபதிக்கு சம்பந்தன் கடிதம்.

பௌத்தத்தை பாதுகாக்கிறோம் என்ற போர்வையில் அடையாளம் காணப்பட்ட நிலங்களில் சிங்கள குடியேற்றங்களை ஏற்படுத்துவதற்கே, கிழக்கு மாகாண தொல்பொருள் முகாமைத்துவ செயலணி உருவாக்கப்பட்டுள்ளது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் கிழக்கு மாகாணத்தையும் முடிந்தளவிற்கு வடமாகாணத்தையும் சிங்கள பகுதிகளாக மாற்றுவதும் இதன் நோக்கம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாணம் பல்லின சமூகத்தினர் வாழும் பகுதி என்ற போதிலும் மாகாணத்தின் பெரும்பான்மையான மக்கள் தமிழ் பேசுபவர்கள் என்பதை சம்பந்தன் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

செயலணி அதன் கட்டமைப்பில் முற்றுமுழுதாக சிங்களவர்களை கொண்டுள்ளது என சுட்டிக்காட்டியுள்ள அவர் அந்த செயலணி உருவாக்கப்பட்ட விதம் அது ஒரு சமூகத்தின் நலன்களிற்காக உருவாக்கப்பட்டுள்ளது என்பதை புலப்படுத்துகின்றது- ஒரு மதத்தின் நலன்களை பாதுகாப்பதற்காக உருவாக்ப்பட்டுள்ளது என்பதையும் புலப்படுத்துகின்றது – எனவும் சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

ஏன் ஏனையமாகாணங்கள் கைவிடப்பட்டுள்ளன? ஏன் ஏனைய சமூகங்கள் மதங்கள் கைவிடப்பட்டுள்ளன என்ற கேள்வியை எழுப்புவதும் பொருத்தமாகயிருக்கும் எனவும் சம்பந்தன் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

தமிழ் இந்துக்களின் ஆழமான வேர்கள் வடக்குகிழக்கில் மாத்திரமல்லாமல் நாட்டின் முழுபகுதியிலும் காணப்படுவதால் இலங்கை தமிழன் இந்து என்ற அடிப்படையில் எனது கரிசனைகள் எழுந்துள்ளன என சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

வடக்குகிழக்கிற்கு வெளியே இந்துக்களிற்கு முக்கியமான பல ஆலயங்கள் உள்ளன என தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ள அவர் புராதன இந்து ஆலயங்களின் சேதமடைந்த பகுதிகளை பாதுகாப்பதற்கு ஏன் தொல்பொருள் திணைக்களம் நடவடிக்கை எடுக்கவில்லை என கேள்வி எழுப்பியுள்ளார்.

தொல்பொருள் திணைக்களம் துரதிஸ்டவசமாக ஒரேயொரு மதத்தை ஊக்குவிக்கின்றது என்ற பெயரை சம்பாதித்துள்ளது எனவும் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ள அவர் ஏனைய மதங்களின் நியாயபூர்வமான நலன்களிற்கும் ஆபத்தானதாக காணப்படுகின்றது என்ற பெயரையும் சம்பாதித்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

செயலணி பல கேள்விகளை எழுப்பியுள்ளது என குறிப்பிட்டுள்ள அவர் நிலங்களை ஒதுக்குவது தொடர்பில் இந்த நாட்டில் சட்டங்கள் உள்ளன,அரச நிலங்களை ஒதுக்குவதே சுதந்திரத்திற்கு பிற்பட்ட காலம் முதல் இந்த நாட்டில் மிகவும் பதட்டமான விடயமாக காணப்படுகின்றது எனவும் தெரிவித்துள்ளார்.

இந்த கடிதத்தில் மேலே குறிப்பிட்டுள்ள விடயங்கள் வடக்குகிழக்கை சேர்ந்த தமிழ் பேசும் மக்களிற்கு அநீதி இழைக்கப்பட்டதை தெளிவாக புலப்படுத்துகின்றன என சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

இதுவரை இடம்பெற்ற அனைத்தையும் உறுதிப்படுத்தும் பணியே செயலணிக்கு வழங்கப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பௌத்தத்தை ஊக்குவிக்கின்றோம்,பாதுகாக்கின்றோம் பேணுகின்றோம் என்ற போர்வையில் அத்தகைய அடையாளம் காணப்பட்ட நிலங்களில் அடையாளம் காணப்பட்ட அளவிற்கு சிங்களவர்களை குடியேற்றுவதே இதன் நோக்கம் என தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இலங்கை ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் கிழக்கு மாகாணத்தையும் முடிந்தளவிற்கு வடமாகாணத்தையும் சிங்கள பகுதிகளாக மாற்றுவதும் இதன் நோக்கம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!