முகக்கவசம் அணியாது குறுக்கு விசாரணை செய்த சட்டத்தரணியால் பதறிய சாட்சி!

யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் மூத்த சட்டத்தரணி மு.றெமிடியஸ் முகக்கவசம் அணியாது குறுக்கு விசாரணை செய்வது தொடர்பில் சாட்சியான மு.தம்பிராசா மன்றிடம் முறையிட்டதால் சமூக இடைவெளி பேணி குறுக்கு விசாரணை செய்யுமாறு சட்டத்தரணிக்கு நீதிமன்று அறிவுறுத்தல் வழங்கிய சம்பவம் நேற்று (25) இடம்பெற்றுள்ளது.

அரசியல் செயல்பாட்டாளர் மு.தம்பிராசாவிடம் 6 இலட்சம் ரூபாய் பணத்தை வாங்கி நம்பிக்கை மோசடி செய்த குற்றச்சாட்டு தொடர்பான வழக்கு யாழ்ப்பாணம் நீதிமன்றில் நீதிவான் ஏ.பீற்றர் போல் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கில் எதிரி சார்பில் முன்னிலையான மூத்த சட்டத்தரணி மு.றெமிடியஸ், சாட்சியான மு.தம்பிராசாவிடம் சுமார் ஒரு மணிநேரம் குறுக்கு விசாரணையை முன்னெடுத்தார். ஒரு கட்டத்தில் சாட்சி மு.தம்பிராசா, மன்றிடம் முறைப்பாடு ஒன்றை முன்வைத்தார்.

எதிரி தரப்புச் சட்டத்தரணி முகக்கவசம் அணியாமல் தனக்கு அருகே வந்து குறுக்கு விசாரணை செய்கின்றார் என்று சாட்சி தனது முறைப்பாட்டை முன்வைத்தார்.

சாட்சியின் முறைப்பாட்டையடுத்து, எதிரி தரப்புச் சட்டத்தரணியை சற்று தூரத்திலிருந்து குறுக்கு விசாரணையை முன்னெடுக்குமாறு மன்று அறிவுறுத்தல் வழங்கியது. அதனடிப்படையில் குறுக்கு விசாரணையை மூத்த சட்டத்தரணி மு.றெமிடியஸ் முன்னெடுத்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!