ஆளில்லா விமான தாக்குதலில் பயங்கரவாத இயக்கத் தலைவன் பலி

பாகிஸ்தான் எல்லையில் செயற்பட்டு வரும் தெரிக் இ தாலிபன் பயங்கரவாத இயக்கத் தலைவன் அமெரிக்க ராணுவம் நடத்திய ஆளில்லா விமான தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான் எல்லையில் அமைந்துள்ள குனார் பகுதியில் தெரிக் இ தாலிபன் பயங்கரவாத இயக்கம் செயல்பட்டு வருகிறது. பாகிஸ்தான் தாலிபன் என்றழைக்கப்படும் இந்த இயக்கத்தின் தற்போதய தலைவனான முல்லா பாஸல் உல்லா வசிக்கும் இடத்தை குறிவைத்து நேற்று அமெரிக்க ராணுவம் ஆளில்லா விமானத் தாக்குதல்களை மேற்கொண்டது.

இந்த தாக்குதலில் முல்லா பாஸல் கொல்லப்பட்டதாக அமெரிக்க ராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். கொல்லப்பட்ட முல்லா பாஸல் தலைக்கு 5 மில்லியன் அமெரிக்க டாலர்கள் நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது.

பாகிஸ்தானின் பெஷாவரில் உள்ள ராணுவ பள்ளியில் கடந்த 2014-ம் ஆண்டு இந்த இயக்கத்தினர் நடத்திய தாக்குதலில் 151 மாணவர்கள் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!