பொதுமக்கள் கூடும் இடங்களில் பாதுகாப்பு அதிகரிப்பு! – புலனாய்வுப் பிரிவு ஆலோசனை.

புலனாய்வுப் பிரிவுகளின் ஆலோசனைக்கு அமைய, தேவாலயங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

தேவாலயங்களிலும், பொதுமக்கள் அதிகளவில் கூடுகின்ற கண்டி, கதிர்காமம் போன்ற இடங்களிலும், ஏனைய வழிபாட்டுத தலங்களிலும் பாதுகாப்பு தொடர்ந்து தீவிரப்படுத்தப்பட்டிருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

புலனாய்வுப் பிரிவுகளின் ஆலோசனைப்படியே பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, சிறப்பு புலனாய்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு, நாடு முழுவதும் உள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களும் எச்சரிக்கப்பட்டுள்தாகவும், அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், ஏதேனும் தேவாலயம் அல்லது ஏனைய வழிபாட்டுத் தலங்கள் கூடுதல் பாதுகாப்பு கோரினால், அதனை வழங்குமாறும், பொலிஸ் நிலையங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு வாரங்களாக தேவாலயங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களில் பெருமளவு பாதுகாப்புப் படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர்.

குறிப்பாக ஞாயிறு ஆராதனைகளின் போது அதிகளவில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள பொலிஸ் பேச்சாளர், இது ஒரு விசேட நடவடிக்கை அல்ல என்று தெரிவித்துள்ள போதும், புலனாய்வுப் பிரிவுகளால் விடுக்கப்பட்ட ஆலோசனையின் பேரிலேயே பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் தொடர்ந்து பொலிசார் விழிப்பு நிலையிலேயே இருப்பார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!