13 ஐ ஒழிக்க விடமாட்டேன்!- வாசு சூளுரை

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை இரத்து செய்து மாகாண சபை முறைமையை இல்லாதொழிப்பதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது என்று ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக கருத்து தெரிவித்த வாசுதேவ நாணயக்கார, புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டாலும் அதனூடாக அதிகார பகிர்வு வழங்கப்பட வேண்டும் இதற்காக தொடர்ந்து குரல் கொடுப்பேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

புதிய அரசாங்கத்தில் அரசியலமைப்பின் 19வது திருத்தம் நீக்கப்பட்டு புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்றும் இனப்பிரச்சினைகளுக்கு தீர்வாக கொண்டுவரப்பட்ட அரசியலமைப்பின் 13வது திருத்ததை நீக்குவதாக ஆளும் தரப்பின் உறுப்பினர்கள் குறிப்பிடுவது சாத்தியமற்ற செயற்பாடு என்றும் அவர் கூறினார்.

13ஆவது திருத்தம் இரு நாடுகளை அடிப்படையாகக் கொண்டது என்பதை மறந்து விட முடியாது என சுட்டிக்காட்டிய வாசுதேவ நாணயக்கார, மாகாண சபை முறைமையின் ஊடாகவே இனப்பிரச்சினைக்கு ஒரளவனும் தீர்வு கிடைக்கப் பெற்றுள்ளது என்பதை புரிந்துகொள்ள வேண்டும் என குறிப்பிட்டார்.

பொதுத்தேர்தலைத் தொடர்ந்து பழைய தேர்தல் முறைமையில் மாகாண சபை தேர்தல் நடத்தப்படும் என்றும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்களுக்கு மாத்திரமல்ல அனைத்து மாகாணங்களுக்கும் அதிகாரம் அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதற்கு அமைய பகிர்ந்தளிக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!