கென்யாவில் 12 வயது சிறுமியை இரண்டு பேருக்கு அடுத்தடுத்து திருமணம் செய்து வைத்த தங்தை!

கென்யாவில் 12 வயது சிறுமி ஒரு மாத காலத்திற்குள் இரண்டு ஆண்களுடன் பெற்றோர் திருமணம் செய்து வைக்கப்பட்ட நிலையில், அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளார். குறித்த சிறுமியின் தந்தை, தலைநகர் நைரோபியின் மேற்கே நரோக் பகுதியில், 51 வயதான ஒருவரை திருமணம் செய்து கொள்ளும்படி கட்டாயப்படுத்தியுள்ளார். ஆனால் அங்கிருந்து தப்பிய அந்த சிறுமி 35 வயதான நபருக்கு மணம் முடித்து வைக்கப்பட்டார். இதனிடையே தகவல் அறிந்து, சிறுவர் உரிமை ஆர்வலர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளார். கென்யாவை பொறுத்தமட்டில், 18 வயதிற்குட்பட்ட ஒருவரை திருமணம் செய்வது என்பது குற்றச்செயலாகும்.

கொரோனா வைரஸ் தொற்றுநோயால் வறுமை மற்றும் பள்ளிகள் மூடப்பட்டுள்ளது குழந்தை திருமண வழக்குகளை அதிகரிப்பதில் ஒரு முக்கிய பங்கைக் கொண்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளனர். சில குடும்பங்கள் பல நாட்களாக கடும் பட்டினியுடன் வாழ்ந்து வருகின்றனர். இரண்டு அல்லது மூன்று மாடுகளை வரதட்சணையாகப் பெறுவதற்கான வாய்ப்பு அமையும்போது, இதுபோன்ற நடவடிக்கைகளில் பெற்றோர்கள் ஈடுபடுவதாகவும் அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது.

நரோக் கவுண்டியில் வசிக்கும் மாசாய் சமூகத்தினரிடையே வயதுக்குட்பட்ட சிறுமிகளை திருமணம் செய்வது வழக்கமாக கண்டுவருவதாக தெரிவித்துள்ளனர். மாசாய் சிறுமிகள் பெற்றோர்களால் வருவாய் ஈட்டும் பொருளாகவே கருதப்படுகிறார்கள், மேலும் கால்நடைகளுக்கு ஈடாக தந்தையால் தெரிவுசெய்யப்பட்ட ஆணுடன் திருமணம் செய்து வைக்கப்படுகிறார்கள். அரசாங்கம் குறித்த பாரம்பரியத்தை முறியடிக்க முயன்று கொண்டிருக்கிறது, ஆனால் தற்போதுள்ள சட்டங்களை சரியாக அமுல்படுத்தாததால் அது இன்னும் ஓரளவு வளர்கிறது.

தொடர்புடைய 12 வயது சிறுமிக்கு வரதட்சணையாக அந்த 51 வயது நபர் நான்கு மாடுகளை வழங்க முன்வந்துள்ளார். ஆனால் சிறுமி இந்த திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கவே, அவரது ஆண் உறவினர்களால் கடுமையாக தாக்கப்பட்டார் என உள்ளூர் பத்திரிகைகள் தகவல் வெளியிட்டுள்ளன. இந்த விவகாரம் தொடர்பில் பேசிய சிறுமி, அந்த திருமணத்தில் இருந்து நான் நான் தப்பித்தேன், ஆனால் குடும்ப உறுப்பினர்களால் தண்டிக்கப்படுவேன் என்ற பயத்தில் என் தந்தையின் வீட்டிற்கு திரும்பிச் செல்ல முடியாததால், திருமணமான 35 வயதுடைய ஒருவருடன் நான் ஓடிவிட்டேன் என்றார்.

ஆனால் சிறுமியின் தந்தை இந்த தகவல் அறிந்து, சிறுமியை வலுக்கட்டாயமாக மீட்டு வந்து அந்த 51 வயது நபரிடம் ஒப்படைத்துள்ளார். இந்த நிலையிலேயே அதிகாரிகள் தரப்பு சிறுமியை மீட்டுள்ளது. அந்த 51 வயது நபர் பொலிசாருக்கு பயந்து தலைமறைவாகியுள்ளார். தற்போது தலைமறைவாகிவிட்ட தந்தை மற்றும் சிறுமியை திருமணம் செய்த இரண்டு நபர்களையும் பொலிசார் தேடி வருகின்றனர் என்று உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவர்கள் ஐந்து ஆண்டுகள் வரை சிறைக்கு அனுப்பப்படலாம் அல்லது 1 மில்லியன் கென்ய ஷில்லிங் வரை ($ 10,000) அபராதம் விதிக்கப்படலாம் என கூறப்படுகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!