தூங்கிக்கொண்டிருந்த போது கணவனுக்கு வந்த அழைப்பு: வீடியோ பதிவு செய்துவிட்டு தற்கொலை செய்துகொண்ட மனைவி

தமிழகத்தில் கணவனின் உண்மை முகம் அம்பலமானதால், தற்கொலை செய்து கொண்ட மனைவி, தன்னுடைய மரணத்திற்கு யார் காரணம் என்பது குறித்து பெற்றோர்களுக்கு வீடியோ அனுப்பியுள்ளார். கடலூர் மாவட்டம், விருத்தாசலம் எருமனூர் கிராமத்தை சேர்ந்தவர் விஜயகுமார். இவருக்கும் கள்ளக்குறிச்சி மாவட்டம் நீலமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த ஷோபனா என்பவருக்கும் 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. சென்னை, ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் விஜயகுமாருக்கு திருமணத்தின் போது, 50 சவரன் நகைகளும், ஒரு லட்ச ரூபாய் மதிப்புள்ள இரு சக்கர வாகனமும், வீட்டுக்கு தேவையான அனைத்துத் பொருட்களும், வரதட்சணையாக பெண் வீட்டார் கொடுத்துள்ளனர்.

இந்த தம்பதிக்கு ஒரு வயதில் ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் மாமியார், ஷோபனாவிடம் கூடுதல் வரதட்சணை கேட்டு ஆபாச வார்த்தைகளால் வசைபாடி வந்ததாக கூறப்படுகின்றது. சென்னை ஐடி கம்பெனியில் 85 ஆயிரம் ரூபாய் சம்பளத்திற்கு பணிபுரிந்த விஜயகுமார், இந்த கொரோன ஊரடங்கு காரணமாக வேலையை இழந்து சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார். வீட்டில் விஜயக்குமார் தூங்கிக் கொண்டிருந்த போது, அவரின் செல்போனுக்கு ஈரோட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் அழைத்துள்ளார். அதில், தான் விஜயகுமாரின் காதலி என பேசத் துவங்கிய அவர், சுமார் 41 நிமிடம்

விஜயகுமாரின் மொத்த காதல் விளையாட்டுகளையும் அப்படியே ஷோபனாவிடம் போட்டு கொடுக்க, ஷோபனா கடும் வேதனையடைந்துள்ளார். அதன் பின், தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்த அவர், தன்னுடைய செல்போனில் இரண்டு வீடியோக்களை பதிவிட்டுள்ளார். ஒன்றில் தன் கணவரின் பெண் தொடர்பு மற்றும், மாமியார் வரதட்சணை கேட்டு அடித்து உதைத்து கொடுமைப்படுத்துவது குறித்து தெரிவித்துள்ளார்.

மற்றொரு வீடியோவில், தன்னை கணவர் அடிக்கும் போது , வீட்டுக்குள் சென்று அறையை பூட்டி அடிக்கச்சொல்லி மாமியார் தூண்டியதாக கூறும் ஷோபனா, தனது ஒரு வயதுக் குழந்தையை பத்திரமாக பார்த்துக் கொள்ளுமாறும், தன்னுடைய அப்பா இறந்த இடத்தின் அருகே தன்னை அடக்கம் செய்ய வேண்டும் என்றும் தனது தாயிடம் உருக்கமாக தெரிவித்துள்ளார். இந்த இரு வீடியோக்களையும் பெற்றோருக்கும் உறவினர்களுக்கும் அனுப்பி வைத்து விட்டு புதன்கிழமை காலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டர். இது குறித்து வழக்கு பதிந்து விசாரித்து வரும் பொலிசார் இரு வீடியோக்களையும், முன்னாள் காதலி பேசிய ஆடியோவையும் முன்னெடுத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!