சசிகலா சிறையிலிருந்து விடுதலையானதும் அதிமுகவுக்கு தலைமை வகிப்பார்: முக்கிய நபர் வெளியிட்ட தகவல்!

சிறையில் இருந்து சசிகலா வெளியில் வந்த பின்னர் அதிமுக வுக்கு அவரே தலைமை வகிப்பார் என கார்த்தி சிதம்பரம் எம்.பி தெரிவித்துள்ளார். சொத்து குவிப்பு வழக்கில் சிறைத் தண்டனை அனுபவித்துவரும் சசிகலா, நன்னடத்தை காரணமாக முன்கூட்டியே விடுதலை செய்யப்பட வாய்ப்புள்ளதாகவும், அனேகமாக அவர் ஆகஸ்ட் மாதம் விடுதலை செய்யப்படலாம் என்றும் ஒரு தகவல் அண்மைகாலமாக காட்டுத் தீயாக பரவி வருகிறது.

அவ்வாறு அவர் வெளியே வந்தால், அதிமுகவுக்கு அவர் தலைமை ஏற்பார் என்றும் பேசப்பட்டு வருகிறது. ஆனால் சசிகலா சிறையில் இருந்து வெளியே வரமாட்டார் என்றும், கட்சியை முதல்வர் பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும் செம்மையாக வழி நடத்தி வருகின்றனர் என்றும் உணவுத் துறை அமைச்சர் காமராஜ் நேற்று கூறியிருந்தார்.

இது குறித்து இன்று பேட்டியளித்த அரசியல் பிரபலமும், எம்.பி யுமான கார்த்தி சிதம்பரம், சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்தால், அவர் அதிமுகவுக்கு தலைமை ஏற்பார் என்று சுருக்கமாகவும் ஆணித்தரமாகவும் கூறினார். அவரது இந்த கருத்து தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!