சீனாவில் வாடகைக்கு வீடு கிடைக்காத விரக்தியில் 21 பேரை ஏரியில் மூழ்கடித்து கொன்ற பேருந்து சாரதி!

சீனாவில் தமது குடியிருப்பு அதிகாரிகளால் இடிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பேருந்து சாரதி ஒருவர் முன்னெடுத்த கொடுஞ்செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் குய்ஷோ மாகாணத்தில் அன்ஷுன் நகரத்தில் கடந்த 7ம் திகதி பயணிகளை ஏற்றிக்கொண்டு வந்த பேருந்து ஒன்று திடீரென கட்டுப்பாட்டை இழந்தது. இந்நிலையில் பாலத்துக்கு குறுக்கே தாறுமாறாக சென்ற பேருந்து அங்கிருந்து ஏரியில் கவிழ்ந்து விபத்துக்குளானது. இந்த கோர விபத்தில் 12 மாணவர்கள் உட்பட 21 பேர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தனர். 15க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்ததாக சீன ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஆனால், இந்த விபத்துக்கான காரணம் உடனடியாக கண்டறியப்படவில்லை. விபத்து நடந்த நேரத்தில் பேருந்தில் பயணித்தவர்களின் மொத்த எண்ணிக்கை குறித்தும் எந்த விளக்கமும் தெரிவிக்கவில்லை. இதனிடையே, விபத்து நடத்த இடத்தில் இருந்த சிசிடிவியில் பேருந்து விபத்துக்குள்ளான போது வைக்கப்பட்டிருந்த காட்சிகள் சமூக வலைதளத்தில் வெளியாகின.

பொலிசாரின் தொடர் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுகுறித்து அன்ஷுன் நகர பொலிசார் கூறுகையில், 21 பேர் விபத்தில் பலியான சம்பவத்தில் பேருந்தின் சாரதி ஜாங் என்பவரும் அடங்குவார். அவர், ஷான்டி டவுன் புனரமைப்பு திட்டத்தில் புதிய வீட்டுவசதி திட்டத்திற்கு விண்ணப்பித்தார். சீன சட்டத்தின்படி, புதியதாக வீட்டுவசதி கோருவோர், ஏற்கனவே இருந்த வீட்டை இடித்துவிட வேண்டும்.

அதற்கு பதிலாக நிவாரண உதவித் தொகை வழங்கப்படும். அதன்படி பேருந்து சாரதி ஜாங்குக்கும் குறிப்பிட்ட தொகை கொடுக்கப்பட்டது. புதிய வீட்டை கட்டித் தரும் முன், வாடகைக்கு தங்குமிடம் கேட்டு பல இடங்களில் தேடியுள்ளார். எங்கும் அவருக்கு வாடகை வீடு கிடைக்கவில்லை. இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன் அவரது வீடு இடிக்கப்பட்டது. அதனால் தவித்த ஜாங், வீடற்றவராக சிரமத்துக்கு ஆளானார்.

ஒருகட்டத்தில் ஆவேசமடைந்த அவர் சம்பவம் நடந்த 7ம் திகதி குடிபோதையில் பேருந்தை இயக்கி உள்ளார். சீன மதுபான போத்தல் ஒன்றும் பேருந்தில் கண்டெடுக்கப்பட்டது. மட்டுமின்றி சம்பவம் நடப்பதற்கு முன் தனது காதலிக்கு வாய்ஸ் மெசேஜ் அனுப்பி உள்ளார். அதில், இன்று ‘உலகம் சோர்வடையும்’ என்று தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!