பிரித்தானிய அரசாங்கத்தை மிரட்டும் ரஷ்யா!

கசிந்த அமெரிக்க-இங்கிலாந்து வர்த்தக ஆவணங்களை ஒன்லைனில் பரப்புவதன் மூலம் தேர்தலில் வெற்றிபெற தொழிற்கட்சிக்கு உதவ மாஸ்கோ முயன்றதாக பிரித்தானிய அரசாங்கம் குற்றம் சாட்டிய நிலையிலேயே, ரஷ்யா இந்த மிரட்டலை விடுத்துள்ளது. உலக நாடுகளை பொருளாதார ரீதியாகவும், மரண எண்ணிக்கையிலும் ஸ்தம்பிக்க வைத்துள்ள கொரோனா பெருந்தொற்றுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க பல்வேறு நாடுகள் தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில், தங்கள் நாட்டு ஆராய்ச்சி தகவல்களை சீனா திருட முயற்சிப்பதாக அமெரிக்கா குற்றம் சுமத்தியுள்ளது.

தேர்தலில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் சீனா மீது அபாண்டமாக பழி சுமத்துவதாக அந்த நாடு அமெரிக்காவை கண்டித்துள்ளது. இதனிடையே தற்போது ரஷ்யா மீது பிரித்தானியா புதிய குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளது. கொரோனா வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள நாடுகளில் பிரித்தானியாவும் ஒன்று.

கடந்த சில நாட்களுக்கு முன்பு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் வேலையில் இறுதி கட்டத்தை எட்டிவிட்டதாக அந்நாட்டு தெரிவித்திருந்தது. இந்நிலையில், ரஷ்யாவை சேர்ந்த ஹேக்கர்கள் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து ஆராய்ச்சி தொடர்பான அறிவுசார் தகவல்களை திருட முயற்சிப்பதாக பிரித்தானியா தற்போது குற்றஞ்சாட்டியுள்ளது.

மட்டுமின்றி கடந்த ஆண்டு நடைபெற்ற பிரித்தானியா பொதுத்தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு இருந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக வெளியுறவுத்துறை செயலாளர் டொமினிக் தெரிவித்துள்ளார். இங்கிலாந்து – அமெரிக்கா இடையேயான ரகசிய வியாபார தகவல்களை திருடி இணைய தளத்தில் வெளியிட்டு அதன் மூலம் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்த முயற்சிகளை ரஷ்யா செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

தேர்தலில் தலையீடு, கொரோனா தடுப்பு மருந்து ஆராய்ச்சி தகவல் திருட முயற்சி என பிரித்தானியா தெரிவித்த குற்றச்சாட்டுகளுக்கு ரஷ்யா மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும், இந்த குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றது எனவும், நட்பற்ற செயல்பாடுகளை ரஷ்யா ஒருபோதும் பொறுத்துக் கொள்ளாது எனவும், தகுந்த பதிலடி தருவதே வழக்கம் எனவும் ரஷ்யா மிரட்டல் தொனியில் தெரிவித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!