தேர்தலுக்குப் பின் சுமந்திரன் பெயரை உச்சரிக்கும் தேவை இராது! – கஜேந்திரகுமார்

கூட்டமைப்பில் சுமந்திரன் வெறுமனே சட்ட ஆலோசகராகவே இருக்கின்றார். எதிர்வரும் ஐந்தாம் திகதி நடைபெறவுள்ள பொதுத்தேர்தலின் பின்னர் அவரது பெயரை உச்சரிக்க வேண்டிய தேவை இருக்காது என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்களுக்கு, கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம்- கொக்குவிலில் கட்சி அலுவலகத்தில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இது தொடர்பாக தகவல் வெளியிட்டுள்ளார்.

“யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நேற்று முன்தினம் தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு இடையிலான விவாதம் நடைபெறுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. திடீரென இந்த நிகழ்ச்சி இரத்துச் செய்யப்பட்டது.

எமது கட்சியின் சார்பில் சட்ட ஆலோசகர்களான சுகாஸ் மற்றும் காண்டீபன் ஆகியோர் கலந்து கொள்ளவிருந்தனர். எனினும் நான் கலந்து கொள்ளவில்லை எனத் தெரிவித்து, தாம் நிகழ்வுக்கு வரவில்லை என்று சுமந்திரன் கூறியதாக ஊடகங்கள் வாயிலாக அறிந்தேன்.

சுமந்திரன் முதலில் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். நான் ஒரு கட்சியின் தலைவராக இருக்கின்றேன். அப்படியாயின் இன்னொரு கட்சியின் தலைவருடனேயே நான் விவாதத்திற்கு செல்ல வேண்டும்.

அதனாலேயே எனது சட்ட ஆலோசகரை அந்த நிகழ்வுக்கு அனுப்பத் திட்டமிட்டேன். ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் பதவியையும் இழந்து வெறுமனே சட்ட ஆலோசகராவே தற்போது செயற்பட்டு வருகின்ற சுமந்திரன், இவர்களுடன் விவாதம் செய்ய பயந்தே அவர் வரவில்லை.

சுமந்திரன் பொது வெளிகளில் குறிப்பிடுகின்ற கருத்துக்களை கட்சியின் கருத்தாக எடுக்க வேண்டாம் என கூட்டமைப்பின் தலைவரே கூறிவருகின்றார்.

அது மட்டுமல்லாது சுமந்திரனின் கருத்துக்களை கணக்கில் எடுக்கத் தேவை இல்லை என்று பல தடவை கூறிவருகின்றார்.

அப்படியாயின் கூட்டமைப்பில் சுமந்திரன் வெறுமனே சட்ட ஆலோசகராகவே இருக்கின்றார். எதிர்வரும் ஐந்தாம் திகதி நடைபெறவுள்ள பொதுத்தேர்தலின் பின்னர் அவரது பெயரை உச்சரிக்க வேண்டிய தேவை இருக்காது.

அதனால் தான் எனது கட்சி உறுப்பினர்களுக்கும் சுமந்திரனின் பெயரை இனி உச்சரிக்கக் கூடாது என கூறி வைத்துள்ளேன் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!