சமஷ்டி, தன்னாட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை!

சமஷ்டி, தன்னாட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை என்று பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தில், தமிழ் மக்களுக்கு சமஷ்டி அடிப்படையிலான தன்னாட்சி உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருப்பது குறித்து கருத்துத் தெரிவிக்கையிலே பிரதமர் மஹிந்த ராஜபக்ச இவ்வாறு கூறியுள்ளார்.

“பிரபாகரன் தலைமையிலான தமிழீழ விடுதலைப் புலிகள் சமஷ்டி கேட்டார்கள், தன்னாட்சி கேட்டார்கள், தமிழீழம் கேட்டார்கள், தனிநாடு கேட்டார்கள். இதையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் ஒவ்வொன்று ஒவ்வொன்றாகக் கேட்டு வருகிறார்கள்.

எமது ஆட்சியில் சமஷ்டி, தன்னாட்சி, தமிழீழம், தனிநாடு என்ற பேச்சுக்கே இடமில்லை. எமது ஆட்சியில் இவை ஒன்றுமே கிடைக்காது.

மூவின மக்களின் பிரச்சினைகளையும் ஒரே மேசையில் வைத்தே பேசுவோம். மூவின மக்களுக்கும் உரித்தான தீர்வையே நாம் வழங்குவோம்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கேட்கிறது என்பதற்காகவோ அல்லது சர்வதேச எமக்கு அழுத்தம் கொடுக்கும் என்பதற்காகவோ எமது நிலைப்பாட்டில் மாற்றத்தை ஏற்படுத்தமாட்டோம்.

இலங்கை தனி ஓர் இனத்துக்குச் சொந்தமான நாடு அல்ல; இது ஒரு பல்லின நாடு. இந்த நாட்டுக்கென ஓர் அரசு உண்டு; சட்டம் உண்டு, இறையாண்மை உண்டு. இதை மீறி எவரும் செயற்பட முடியாது” என்றும் பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!