வளங்களை சூறையாடுபவர்களை எம் மண்ணை விட்டு அகற்ற வேண்டும்!

தமிழ் இனத்திற்கு எதிரான குற்றங்களை புரிந்த குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும் என்றும், குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டாலே எதிர்காலத்தில் எம்மினத்தின் மீது புரியப்படும் குற்றங்களை தடுக்க முடியும் என்றும், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர், சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

ஊர்காவற்றுறை புளியங்கூடல் பகுதியில் நேற்று நடைபெற்ற தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

“எங்களுடைய மக்களின் உரிமைகளை வென்றெடுக்கவே நாம் அரசியல் களத்தில் புகுந்தோம். எங்களுடைய மண் பறிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று கல்வியும் பறிக்கப்பட்டு வருகின்றது நான் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியேறும் போது 100 வீதம் தமிழ் மாணவர்களே கல்வி கற்றனர். ஆனால் இன்று எத்தனை சிங்கள மாணவர்கள் கற்கின்றார்கள்?

எமது கடல் வளமும் சூறையாடப்படுகிறது. எம்மிடம் இருந்து எல்லாமே பறிக்கப்பட்டு வருகின்றன. எம் இனத்தின் மீதான ஒடுக்குமுறைகளை இல்லாமல் ஒழிக்கவே எமக்கு அங்கீகாரம் தாருங்கள் என கேட்கிறோம். எமது வளங்களை சூறையாடுபவர்களை எம் மண்ணை விட்டு அகற்ற வேண்டும்.

வடமராட்சி தொடக்கம் மண் கும்பான் வரையில் மணல் கொள்ளையில் ஈடுபடுபவர்களை எம் மண்ணிலிருந்து அகற்ற வேண்டும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!