இம்முறை தேர்தல் கடமையில் பொலிஸாருக்கு பெரும் பொறுப்பு – யாழ் பாெலிஸ் பாெறுப்பதிகாரி

தேர்தல் விதிமுறை மீறல்களை தடுப்பதோடு, கொரோனா தொற்று ஏற்படாதவாறு தேர்தல் கடமையில் ஈடுபடுங்கள் என யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரசாத் பெர்னான்டாே அறிவுறுத்தியுள்ளார்.

தேர்தல் கடமையில் ஈடுபடவுள்ள பொலிஸாருக்கான தேர்தல் கடமை தொடர்பாக விளக்கமளிக்கும் கூட்டம் யாழ்ப்பாணம் – துரையப்பா மைதானத்தில் இடம்பெற்ற போதே மேற்கண்டவாறு அறிவுறுத்தியுள்ளார். மேலும்,

“பொலிஸாராகிய நாங்கள் முக்கியமான கடமையினை முன்னெடுக்கவுள்ளோம். அதிலும் இம்முறை எமக்கு முன்னுள்ள பெரிய சவால் கொரோனா. வழமையாக பொலிஸார் தேர்தல் விதிமுறை மீறல்கள் தேர்தல், வன்முறைகளை தடுப்பதற்கும் தேர்தல் கடமையில் ஈடுபடுத்தப்படுவார்கள்.

எனினும் இம்முறை தேர்தலில் இரண்டு விடயங்களை நாங்கள் கருத்திலெடுக்க வேண்டும். அதாவது வாக்களிப்பு நிலையங்களில் தேர்தல் விதிமுறைகளை மீறுவோர் தொடர்பிலும் அதேபோல் மீண்டும் கொரோனா தொற்று ஏற்படாதவாறு. மக்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு எம்மிடமுள்ளது.

வாக்களிப்பு நிலையங்களில் கடமையில் உள்ள பொலிஸாார் மூன்று விடயங்களில் அதிககவனம் செலுத்த வேண்டும். ‘வாக்காளர்கள் கட்டாயமாக முககவசம் அணிந்து வருதல், கைகள் கழுவி வாக்களிப்பு நிலையத்திற்கு செல்லுதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல்’ போன்றவற்றை கண்காணித்து நடைமுறைப்படுத்த வேண்டும்.” – என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!