இது தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் நடக்கின்ற ஜனநாயகப் போர்! – என்கிறார் சிறிதரன்

தமிழர்களை விலைபேச முடியாது என சிங்களத்திற்கும் அவர்களது முகவர்களுக்கும் உரக்க சொல்ல தமிழ்த் தேசிய அடையாளத்தை காக்க வரலாற்றின் தீர்ப்பை எழுத ஒன்றாக எழுக தமிழர்களே என அறைகூவல் விடுக்கின்றேன் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி நகர் பகுதியில் அமைந்துள்ள பசுமைப் பூங்காவில் நேற்று இடம்பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

“இது ஒரு தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் நடக்கின்ற ஜனநாயகப் போர். இதனை எதிர்கொள்ள தன்மானத் தமிழர்கள் அனைவரும் தயாராகுங்கள்.

தமிழர்களின் பிரதிநிதிகளாக இருந்த விடுதலைப் போராட்டத்தை முள்ளிவாய்க்காலில் பல நாடுகள் சேர்ந்து அடித்து மௌனிக்க வைத்தார்கள் அதன் பின்னர் அடுத்து யார் தமிழர்களை வழிநடத்தப் போகிறார்கள் வழிநடத்துகிறார்கள் என இலக்கு வைத்த அரசு. தமிழ்த் தேசியத்தை அழிக்க தமிழர்களின் இருப்பை அழிக்க தமிழர்களின் தேசிய அடையாளத்தை அழிக்க தமிழர்களின் ஏக பிரதிநிதிகளான தமிழ்தேசியக் கூட்டமைப்பை சிதைக்க வேண்டும் என்று ஓர் திட்டத்தை முன்வைத்தது.

அதற்கு தமிழர்களின் வாக்குக்களை சிதைக்க பல்வேறு கட்சிகளை இன்று களத்திலே இறக்கி தமிழ்தேசிய இருப்பை அழிக்க சிங்களம் கங்கணம் கட்டி நிற்கின்றது. தமிழர்களே விழிப்பாக இருங்கள் தமிழர்கள் தமிழர்களாக இருக்கிறார்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் தான் இருக்கிறார்கள் என்ற செய்தியை தேர்தலில் சிங்கள இனவாத அரசுக்கும் சர்வதேச சமூகத்திற்கும் காட்டவேண்டும்“ எனக் குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!