சம்பந்தனுக்கு தகுதி கிடையாது!- ஶ்ரீகாந்தா

தமிழ் மக்களின் ஒற்றுமை பற்றி பேசுவதற்கு கூட்டமைப்பத் தலைவர் சம்பந்தனுக்கு தார்மீகத் தகுதி கிடையாது. 2001ம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் திருகோணமலையில் குறுகிய பிரதேச வாதத்தை பிரயோகித்தே அவர் என்னைத் தோற்கடித்தார் என்று தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் வேட்பாளரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான ந ஶ்ரீகாந்தா தெரிவித்தார்.

கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் சரிந்து சாய்ந்து கொண்டிருக்கும் தனது கட்சியின் அரசியல் ஆதரவுத் தளத்தை காப்பாற்றுவதற்காக தனது உடல் நிலையையும் கருத்திற் கொள்ளாமல் திருகோணமலையிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு வந்து கடைசிக்கட்ட தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்

இருபது ஆசங்களை கூட்டமைப்பு கைப்பற்ற வேண்டும் என்றும் கைப்பற்றும் என்றும் அவர் தெரிவித்துள்ளார் பகல் கனவு காணும் ஒரு பிச்சைக்காரனைப் போல அவரின் பேச்சு அமைந்துள்ளது

இந்தத் தேர்தலில் கூட்டமைப்பினால் பத்து ஆசனங்களைக்கூட கைப்பற்ற முடியாது என்பதை அதன் பெருந்தலைவரான சம்பந்தருக்கு உரிய மரியாதையுடன் முன் கூட்டியே கூறி வைக்க விரும்புகின்றோம்.

தமிழ் இனம் ஒற்றுமையாக ஓரணியில் நிற்க வேண்டும் என்றும் கூட்டமைப்பை ஆதரிக்க வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்திருக்கின்றார்

ஒற்றுமை பற்றிப் பேச எந்தவொரு தார்மீகத் தகுதியும் அவருக்குக் கிடையாது என்பதை சொல்லியாக வேண்டும் 2001 ம் ஆண்டு ஐப்பசி மாதம் கூட்டமைப்பு ஆரம்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து மார்கழி மாதம் 5ம் திகதி பாராளுமன்றத் தேர்தல் நடைபெற்றது

அந்தத் தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் வேட்பாளர்களில் ஒருவராக நானும் களத்தில் இருந்தேன் சம்பந்தர் தான் முதன்மை வேட்பாளர் தேர்தல் பிரசாரம் சூடு பிடிக்க ஆரம்பித்த பொழுது தமிழ் மக்களின் ஆதரவு எனது பக்கம் திரும்பத் தொடங்கியது

தமிழ்த் தேசியத்தை நேசித்த பல்லாயிரம் தமிழ் வாக்காளர்கள் சம்பந்தரின் நடவடிக்கைகளால் விரக்தி அடைந்திருந்தனர் அவர்களின் ஒரே தெரிவாக நான் மாறத்தொடங்கினேன் இதனைக் கண்டு சம்பந்தர் மிரண்டார். ஓர் அரசியல் சதித் திட்டம் தீட்டப்பட்டது.

சம்பந்தரின் நெருங்கிய சகாக்களும் தீவிர விசுவாசிகளும் யாழ்ப்பாண விரோதக் கோஷத்தை எனக்கெதிராகப் பிரயோகித்தனர்.

யாழ்ப்பாணத்தில் பிறந்து வளர்ந்த எனக்கெதிராக தீந்தமிழ் திருகோணமலை மண்ணில் பிரதேசவாதம் என்கிற நாகாஸ்திரம் நயவஞ்சகமாக பிரயோகிக்கப்பட்டது. வெற்றி பெற்றிருக்கக் கூடிய நிலையில் நான் வீழ்த்தப்பட்டேன்

சம்பந்தருக்கு நாற்பதாயிரம் விருப்பு வாக்குகள் அவருடன் இணைந்த இரண்டாவது ஆசனத்தை குறிவைத்து போட்டியிட்ட துரைரத்தினசிங்கத்திற்கு இருபத்தியேழாயிரம்

வாக்குகள் எனக்கு இருபத்தையாயிரம் வாக்குகள் எனக்கு அடுத்ததாக வந்த சம்பந்தர் தரப்பு வேட்பாளருக்கு ஒன்பதாயிரம் வாக்குகள் ஏனைய மூவருக்கும் ஒரு சில ஆயிரம் வாக்குகள். சம்பந்தரின் தேர்தல் வெற்றி குறுகிய பிரதேச வாதத்தினால் பெறப்பட்டது தமிழ்த் தேசிய ஒற்றுமை என்ற இலட்சியம் முதுகில் குத்தப்பட்டது.

இப்பொழுது அதே சம்பந்தன் யாழ்ப்பாணம் வந்து தமிழினத்தின் ஒற்றுமை பற்றிப் பேசுகிறார். இவரின் அரசியலை தமிழ் மக்கள் முழுமையாக புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே இத்தனை நாளும் நான் பேசாமல் தவிர்த்து வந்த விவகாரத்தை இப்பொழுது நான் பகிரங்கமாக தெரிவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!