இந்தியாவில் மனிதர்கள் மீதான 2-ம் கட்ட கொரோனா தடுப்பூசி சோதனைக்கு அனுமதி!

கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்காக இங்கிலாந்து நாட்டின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், இங்கிலாந்து அரசு மற்றும் அஸ்ட்ரா ஜெனேகா மருந்து நிறுவனத்துடன் இணைந்து ஒரு தடுப்பூசியை உருவாக்கி உள்ளது. இந்த தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி பார்க்கும் மருத்துவ பரிசோதனை முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த தடுப்பூசியை இந்தியாவில் தயாரிக்கும் உரிமையை இந்திய சீரம் இன்ஸ்டிடியுட் பெற்றுள்ளது. இந்தியாவில் ‘கோவிஷீல்டு’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதனை செய்யும் முயற்சிகள் தீவிரமாக நடைபெற்று வருக்றது.

மொத்தம் 3 கட்டங்களாக மனிதர்களுக்கு இந்த தடுப்பூசியை செலுத்தி பரிசோதனை செய்ய திட்டமிடப்படிருந்தது. இதையடுத்து, மும்பை, புனே உள்ளிட்ட பகுதிகளில் கடந்த மாதம் இந்த தடுப்பூசி முதல் கட்டமாக மனிதர்களுக்கு செலுத்தப்பட்டு பரிசோதனை நடைபெற்றது. இந்த பரிசோதனை நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது.

இதற்கிடையில், ஆக்ஸ்போர்டு தடுப்பூசியை 2 மற்றும் 3 ஆம் கட்டமாக மனிதர்களுக்கு பரிசோதனை செய்ய அனுமதி தரக்கோரி இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பிடம் (டிசிஜிஐ) சீரம் இன்டிடியுட் நிறுவனம் கோரிக்கை விடுத்தது. இந்த கோரிக்கையை பரிசீலனை செய்ய மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பின் (சிடிஎஸ்ஒசி) சிறப்பு நிபுணர் குழு ஒன்றை அமைத்தது.

அந்த குழு ஆக்ஸ்போர்டு தடுப்பூசியை மனிதர்களுக்கு அடுத்தகட்டமாக செலுத்துவது தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டது. இந்த ஆய்வுகளுக்கு பின்னர் ஆக்ஸ்போர்டு தடுப்பூசியை 2 மற்றும் 3 ஆம் கட்டங்களாக மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதனை செய்ய அனுமதி வழங்கும்படி சிடிஎஸ்ஒசி அமைப்பின் நிபுணர் குழு கடந்த 31 ஆம் தேதி இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்புக்கு பரிந்துரை வழங்கியது.

இந்நிலையில், சிடிஎஸ்ஒசி-யின் சிறப்புக்குழுவின் பரிந்துரையை ஏற்றுக்கொண்ட இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு (டிசிஜிஐ) இந்திய சிரம் இன்ஸ்டிடியுட்டின் ஆக்ஸ்போர்டு தடுப்பூசியை 2 மற்றும் 3 ஆம் கட்டமாக மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதனை செய்ய அனுமதி வழங்கியுள்ளது.

இந்த அனுமதியின் மூலம் ஆக்ஸ்போர்டு தடுப்பூசியை இந்தியாவின் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்களுக்கு சோதனை முறையில் 2 மற்றும் 3 ஆம் கட்டமாக செலுத்தி தடுப்பூசி கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதில் வெற்றியடைகிறதா? என்பது குறித்து பரிசோதனை செய்யப்பட உள்ளது.

இந்த இறுதி கட்ட பரிசோதனையில் சிரம் இன்ஸ்டிடியுட் பல்வேறு மருத்துவமனைகளுடன் இணைந்து நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 1,600 பேருக்கு சோதனை முறையில் தடுப்பூசியை செலுத்தி பரிசோதனை செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!