கூட்டணியை உடைக்க விரும்பவில்லை! – பின்வாங்கினார் மனோ

தேசிய பட்டியல் விவகாரத்தால், ஐக்கிய மக்கள் சக்தியை உடைக்க விரும்பவில்லை. இது தொடர்பில் சஜித் எடுக்கும் தீர்மானத்துக்கு இணங்குவதாக முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். கொழும்பில் உள்ள ரமடான் ஹோட்டலில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியை நாமே உருவாக்கினோம். அந்தக் கூட்டணியோடு நாம் நீண்டத் தூரம் பயணிக்க வேண்டியிருக்கிறது. அதனால் சில விடயங்களை நாம் விட்டுக்கொடுக்க வேண்டியிருக்கிறது. தேசிய பட்டியல் விவகாரத்தால் எமது பிரதான நோக்கத்துக்குப் பாதிப்பு ஏற்படுத்த இடமளிக்கப்போவதில்லை.

ஐக்கிய தேசிய முன்னணி என்கிறக் கட்சி இப்போது இல்லை. ஐக்கிய தேசிய கட்சியினரும் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைவார்கள். ஐக்கிய மக்கள் சார்பில் போட்டியிட்ட கூட்டணியினருக்கு தமிழர்கள் அல்லாத முஸ்லிம், சிங்களவர்களும் வாக்களித்திருக்கிறார்கள்.

ஐக்கிய மக்கள் சக்தியில் உள்ள பிரதான கூட்டணி தமிழ் முற்போக்குக் கூட்டணியே. இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் வெறும் இரண்டு எம்.பிகளையே பொதுத்தேர்தலில் பெற்றுக்கொண்டுள்ளது. ஆனால் தமிழ் முற்போக்குக் கூட்டணிக்கு 6 எம்.பிகள் கிடைத்துள்ளனர் எனவும் கூறினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!