திருமணமான பெண்ணால் இளைஞனுக்கு நேர்ந்த கதி: துடிக்க துடிக்க கொல்லப்பட்ட கொடூரம்!

தமிழகத்தில் காதல் திருமணம் செய்த இளைஞன் சரமாரியாக அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாம்பரம் மாந்தோப்பு பகுதியை சேர்ந்தவர் கன்னியப்பன். இவருக்கு நிரஞ்சன் என்ற 24 வயது மகன் உள்ளார். நிரஞ்சன் டாட்டூ ஓவியராக வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு நிரஞ்சன், மறைமலைநகரில் இருந்து தாம்பரத்துக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது, காட்டாங்கொளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் அருகே சென்றபோது, காரில் வந்த 5 பேர், அவரை வழிமறித்து உருட்டுக்கட்டையால் அவரை சரமாரியாக தாக்கினர். இதில், சம்பவ இடத்திலேயே நிரஞ்சன் துடி துடித்து பரிதாபமாக உயிரிழந்தார். மர்மநபர்கள் தப்பி சென்றனர். இதையடுத்து நிரஞ்சன் மரணம் குறித்து பொலிசில் புகார் கொடுக்கப்பட்டது. பொலிசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், பரனூர் சுங்கச்சாவடியில் காரில் சந்தேகப்படும்படி சிலர் சுற்றி திரிந்துள்ளனர்.

அவர்களைப் பிடித்து பொலிசார் விசாரித்த போது, நிரஞ்சனை கொலை செய்தவர்கள் என தெரியவந்தது. அதன் பின் 5 பேரையும் கைது செய்த பொலிசார் காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். அதில், காட்டாங்கொளத்தூர் அடுத்த தைலாவரத்தை சேர்ந்தவர் அமலாவதி (25). கடந்த சில ஆண்டுகளுக்கு முன், காஞ்சிபுரத்தை சேர்ந்த ஒருவருடன் அமலாவதிக்கு திருமணமானது.

இவர்களுக்கு 3 வயதில் பெண் குழந்தை உள்ளது. தம்பதி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அமலாவதி, கணவனை பிரிந்து, தைலாவரத்தில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு குழந்தையுடன் வந்து விட்டார். அதே பகுதியில் பியூட்டி பார்லர் நடத்தி வருகிறார். இந்தவேளையில் அமலாவதிக்கு, பேஸ்புக் மூலம் நிரஞ்சன் என்பவர் அறிமுகமானார். நாளடைவில் அவர்கள் காதலித்து வந்தனர். இதையொட்டி, இருவரும் திருமணம் செய்வதாக முடிவெடுத்து பல இடங்களுக்கு சுற்றி திரிந்தனர்.

இதற்கு முன்னதாக அமலாவதி, தினேஷ் (31) என்பவரை காதலித்து வந்துள்ளார். நிரஞ்சனுடன் உள்ள காதல் விவகாரம், தினேஷுக்கு தெரிந்தது. இதையடுத்து தினேஷ், நிரஞ்சனை சந்தித்து, ஏன் அமலாவதியை காதலிக்கிறாய். அவரிடம் இருந்து விலகிவிடு என கூறி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். ஆனால், அவர்களது காதல் தொடர்ந்த நிலையில், நேற்று முன்தினம் நிரஞ்சன், தைலாவரத்தில் உள்ள அமலாவதி வீட்டுக்கு சென்றார். அங்கு, அமலாவதியின் தந்தையிடம், உங்களது மகளை திருமணம் செய்து கொள்கிறேன். அவரது குழந்தையையும் பார்த்து கொள்கிறேன் என கூறியுள்ளார். இதை கேட்ட அமலாவதி, தினேஷுக்கு போன் செய்து, இதுபற்றி தெரிவித்தார்.

இதனால் ஆத்திரமடைந்த தினேஷ், தனது நண்பர்கள் மறைமலைநகர் அருண் (19), கோகுல் (19), சபரிநாதன் (19), பாலாஜி (19) ஆகியோருடன் காரில் சென்று, காட்டாங்கொளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் அருகே பைக்கில் சென்ற நிரஞ்சனை மறித்து அடித்து கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!