50 கிலோ கஞ்சா பொதியுடன் இளம் பெண் கைது! – கணவன் தப்பியோட்டம்.

கிளிநொச்சி- கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட முரசுமோட்டை பகுதியில் 50 கிலோ எடையுடைய கஞ்சா பொதியுடன் இளம் பெண் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி இரணைமடு விமானப்படையினரால் வழங்கப்பட்ட தகவலுக்கு அமைய, பொலிஸ் குழுவினரால் கஞ்சா பொதியும், அதனை மறைத்து வைத்திருந்த குற்றத்திற்காக இளம் குடும்ப பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளார்.

விமானப்படையினர் மற்றும் புலனாய்வு பிரிவினரின் ஒத்துழைப்புடன் பொலிஸார் சுற்றிவளைப்பை மேற்கொண்டிருந்தனர். சுற்றிவளைப்பின்போது வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 50 கிலோ எடையுடைய கஞ்சா பொதி இதன்போது மீட்கப்பட்டுள்ளது, மீட்கப்பட்ட வீட்டிலிருந்த குடும்பப்பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட பெண்ணை விசாரணைகளிற்காக கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் அனுமதி கோரியுள்ளனர். நான்கு நாட்கள் குறித்த பெண்ணை பொலிஸ் காவலில் தடுத்து விசாரிக்க மன்றிடம் பொலிஸாரால் அனுமதி கோரப்பட்டுள்ளது.

குறித்த கஞ்சா பொதி கைது செய்யப்பட்ட பெண்ணின் கணவரால் கொண்டு வரப்பட்டது எனவும், குறித்த சுற்றிவளைப்பின்போது குறித்த சந்தேக நபர் தப்பியோடியுள்ளதாகவும் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!